உப்பாறு ஓடையில் சீரிய தோட்டா.. மணிகண்டனின் இறுதி நிமிடங்கள்! எஸ்எஸ்ஐ கொலை வழக்கில் பரபர ட்விஸ்ட்!
திருப்பூர்: திருப்பூரில் விசாரணை நடத்த சென்ற சிறப்பு சார்பு ஆய்வாளர் சண்முகவேல், கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான மணிகண்டன் என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளார். உடுமலை அருகே உப்பாறு ஓடைப்பகுதியில் மணிகண்டன் ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்த நிலையில், சரவணகுமார் என்ற உதவி ஆய்வாளரை வெட்டிவிட்டு தப்ப முயன்றதாகவும் தற்காப்புக்காக போலீசார் சுட்டதில் சம்பவ இடத்திலேயே மணிகண்டன் பலியானதாக போலீசார் கூறியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த குடிமங்கலம் அருகே சிக்கனூத்து பகுதியில் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டத்தில் வேலை செய்யும் மூர்த்தியும் அவரது மகன்களான தங்கபாண்டியன், மணிகண்டன் ஆகிய 3 பேரும் நேற்று இரவு மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதில் தங்கபாண்டி தனது தந்தை மூர்த்தியை கடுமையாக தாக்கியுள்ளார். இந்த தகவல் அறிந்து அங்கு சென்ற எஸ்.எஸ்.ஐ சண்முகவேல், அவர்களை சமாதானப்படுத்தி, காயமடைந்த மூர்த்தியை ஆம்புலன்சில் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துள்ளார்.

திருப்பூர் எஸ்.எஸ்.ஐ. கொலை
அப்போது பதுங்கி இருந்த மூர்த்தியின் மகன் மணிகண்டன், எஸ்.எஸ்.ஐ., சண்முகவேலுவை பாய்ந்து வந்து தாக்கியதில் நிலைதடுமாறி கீழே விழுந்ததும், அங்கிருந்த மூர்த்தி, தங்கபாண்டி, மணிகண்டன் மூன்று பேரும் சேர்ந்து சண்முகவேலுவை சரமாரியாக வெட்டிக் கொன்றனர். சண்முகவேலுவுடன் சென்ற போலீஸ் டிரைவர் தப்பிச்சென்று தகவல் தெரிவித்ததையடுத்து மேலும், போலீசார் வந்து சண்முகவேலு உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தமிழக அரசு
உயிரிழந்த சப் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் உடல் திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில், உயிரிழந்த சண்முகவேல் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் 1 கோடி ரூபாய் நிதி உதவி அறிவிக்கப்பட்டது. உடுமலை மின்மயானத்துக்கு எஸ்.எஸ்.ஐ. சண்முகவேலுவின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு வைத்து முழு அரசு மரியாதை அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு காவல்துறை
மூன்று சுற்றுகளாக 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து மின்மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பேரும் சரணடைந்ததாக தகவல் பரவியது. இந்த தகவலை போலீசார் உறுதி செய்யவில்லை. இதற்கிடையே கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட மணிகண்டன் உடுமலை அருகே உப்பாறு ஓடை பகுதியில் வைத்து போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
என்கவுண்டர்
தொடர்ந்து மணிகண்டனை அழைத்துச் சென்ற போலீசார் அவர் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் வைத்திருந்த இடத்திற்கு கூட்டிச் சென்றுள்ளனர். ஆயுதத்தை காட்டுவது போல புதர் பகுதிக்கு சென்ற மணிகண்டன் திடீரென அரிவாளை எடுத்து சரவணகுமார் என்ற உதவி ஆய்வாளரை வெட்டிவிட்டு தப்ப முயன்றுள்ளார். போலீசார் எச்சரித்த நிலையில் மீண்டும் தாக்க முற்பட்டதால் தற்காப்புக்காக போலீசார் சுட்டதாகவும் இதில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பலியானதாக கூறப்படுகிறது.
போலீஸ் விளக்கம்
தொடர்ந்து மணிகண்டனின் உடல் உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. காயமடைந்த உதவி ஆய்வாளர் சரவணகுமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக பேசி உள்ள மேற்கு மண்டல காவல்துறை தலைவர் செந்தில்குமார், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது மணிகண்டன் தாக்க முயன்றதால் துப்பாக்கி சூடு நடந்திருக்கிறது. சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகிறோம். விரைவில் இது தொடர்பாக முழு விளக்கம் அளிக்கப்படும்" எனக் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications