மதுபோதையில் மட்டையான பாஜக நிர்வாகி.. தூக்கிச் சென்ற நிர்வாகிகள்.. சமூகவலைதளங்களில் மக்கள் கண்டனம்!
திருப்பூர்: திருப்பூரில் மதுபோதையில் நடக்க கூட முடியாமல் விழுந்த பாஜக ஊராட்சி மன்றத் தலைவரை, உடன் வந்தவர்கள் தூக்கி செல்லும் காட்சிகள் சமூகவலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் பாஜக கட்சியை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, நாளுக்கொரு செய்தியாளர் சந்திப்பு, அறிக்கை, திமுக அரசுக்கு எதிரான குற்றச்சாட்டு என்று தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இன்னும் சொல்லப் போனால், தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி தாங்கள் தான் என்று பாஜகவினர் தொலைக்காட்சி விவாதங்களில் கூறி வருகின்றனர்.
ஆனால் பாஜக நிர்வாகிகளின் செயல்பாடுகளுக்கு மாறாக, கட்சியினர் மக்கள் மத்தியில் பெயர் எடுத்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த மாதப்பூர் ஊராட்சி மன்றத் தலைவர் அசோக்குமார். பாஜக-வை சேர்ந்த இவர் மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 17ம் தேதி பல்லடம் கரையான்புதூரில் பாஜக-வின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், மாதப்பூர் ஊராட்சி மன்றத் தலைவருமான அசோக்குமார் கலந்து கொண்டார்.
இக்கூட்டத்தில் மாதப்பூரில் பணி புரியும் துப்புரவு பணியாளர்களை அழைத்து வந்து அண்ணாமலை அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. கூட்டத்தை முடித்து கட்சி தொண்டர்களுடன் சென்ற மாதப்பூர் பஞ்சாயத்து தலைவர் அசோக்குமார் பொங்கலூர் அருகே உள்ள தனியார் விடுதிக்கு மது அருந்த சென்றுள்ளார். அப்போது அளவுக்கு மீறி குடித்ததால், மதுபோதை தலைக்கேறியுள்ளது. இதனால் நடக்க கூட முடியாத நிலையில், அவர் அங்கேயே தலைதொங்கியபடி மேஜையிலேயே படுத்து கிடந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து அவருடன் வந்த கட்சி தொண்டர்கள் மற்றும் நண்பர்கள் நடக்க முடியாத அசோக் குமாரை அலேக்காக தூக்கி சென்றனர். தற்போது இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஊராட்சி மன்றத் தலைவரும், மாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ள பாஜக நிர்வாகி, தனியார் விடுதியில் மதுபோதையில் நடக்க கூட முடியாமல் உறங்கும் காட்சிகள் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்திற்கு சமூக வலைதளங்களில் ஏராளமானோர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.