எங்க திருப்பூரு.. எங்க ஸ்டேஷன்.. என்ன செய்ய முடியும்? ஓடும் ரயிலில் பயணிகளை மிரட்டிய போதை இளைஞர்கள்
திருப்பூர்: திருப்பூர் ரயில் நிலையத்தில் பயணிகளை இளைஞர்கள் சிலர் மிரட்டும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.
சென்னையில் இருந்து கேரள மாநிலம் ஆழப்புழாவிற்கு விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் பயணம் செய்த இளைஞர்கள் சிலர் பயணிகளிடம் தகராறு செய்ததோடு, திருப்பூர் ரயில் நிலையத்தில் பயணி ஒருவரை தாக்கி ஆபாச வார்த்தைகளுடன் மிரட்டலும் விடுத்துள்ளனர். இது தொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

வேறு யாரும் பேசக் கூடாது: என் ஊரில் நான் மட்டும் தான் சவுண்டு விடுவேன்... வேறு யாரும் பேசக் கூடாது.. வெளியே வா... உன்னை என்ன செய்கிறேன் பாரு என பயணியை மிரட்டும் தொனியில் பேசிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ரயில்வே போலீசார், தகராறில் ஈடுபட்ட இளைஞர் மற்றும் 17-வயது சிறுவன் ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும் தப்பியோடிய இளைஞர்கள் சிலரை தேடி வருகின்றனர்.
பெண் பயணி பேட்டி: ரயிலில் பாதிப்புக்குள்ளான பெண் பயணியான ராமா என்பவர் நடந்த சம்பவம் குறித்து கூறியதாவது:- சென்னையில் இருந்து கோவைக்கு வந்த ரயிலில் நானும் எனது தம்பியும் வந்தோம். எஸ் 9 பெட்டியில் நான் ரிசர்வ் செய்து இருந்தேன். ரயில் ஈரோடு வந்த போது சில பசங்க ஏறினாங்க.. ரயிலில் ஏறியதில் இருந்து ஒரே கலாட்டாவில் ஈடுபட்டனர்.
அப்போது நான் சத்தம் போடாதீங்க என சொன்ன போது.. சிறிது நேரம் அமைதியாக இருந்தனர். பின்னர் மீண்டும் வந்து செல்போனில் பாட்டு போட்டுக்கொண்டு.. சிகரெட் பிடித்துக்கொண்டு இடைஞ்சல் செய்தனர். செல்போனில் வீடியோ எடுத்ததை பார்த்ததும் அதிக இடையூறு கொடுத்தனர். பக்கத்தில் இருந்த பயணிகள் யாரும் எங்களுக்கு உதவி செய்யவில்லை.
யாரும் வரவில்லை: பக்கத்து பெட்டியில் இருந்த எனது தம்பியை வர சொன்னேன். எனது தம்பி.. ஏன் இப்படி செய்கிறீர்கள் என கேட்பதற்குள் அடிக்க ஆரம்பித்தனர். அப்போ என்ன பண்ணுறதுன்னே தெரியல.. டிடிஆரும் வரவில்லை. போலீசாரும் வரவில்லை. போலீசாருக்கு சக பயணிகளும் முயற்சி செய்து இருக்கிறார்கள். ஆனால் யாருமே வரவில்லை.
அசிங்கமாக பேசினர்: திருப்பூரில் ரொம்ப அசிங்கமாக பேசினார்கள். எனது தம்பியையும் தாக்கினார்கள். யாராவது வந்து கேட்பார்கள் என்று பார்த்தேன். அதுவும் இல்லை. திருப்பூரில் இறங்கி கொலை மிரட்டல் விடுத்தனர். கோவையில் இறங்கி வந்த பிறகுதான் புகார் கொடுத்தோம். இளைஞர்கள் அனைவரும் குடிபோதையில் இருந்தனர். சக பயணிகள் யாருமே உதவிக்கு வரவில்லை" என்றார்.
3 பேர் கைது: இதனிடையே, ரயிலில் தகறாரில் ஈடுபட்ட அசோக் (வயது 20) என்ற இளைஞரையும் 17 - வயது சிறுவனையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலுக் வழக்கில் தொடர்புடைய இரண்டு பேரை தேடி வருகிறார்கள். ரயிலில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய போதுமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ரயில்வெ போலீசார் வலியுறுத்துகின்றனனர்.












Click it and Unblock the Notifications