முஸ்லிம்களுக்கு வந்த குட்நியூஸ்..ஹஜ் பயணத்துக்கு கூடுதலாக 1000 பேர்.. தமிழக அரசு அறிவிப்பு
திருச்சி: தமிழ்நாட்டில் இருந்து இந்த முறை கூடுதலாக 1000 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர். பயணம் மேற்கொள்பவர்களுக்கு கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் அரசின் மானியம் வழங்கப்படும் என தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் கூறியுள்ளார்.
மனித சிறப்பை உணரவும், இறைவனின் படைபாற்றலை அறியவும், மக்காவிலுள்ள இறை இல்லத்திற்கு ஹஜ் எனும் புனித பயணத்தை மேற்கொள்ள இஸ்லாம் வழிகாட்டுகிறது. இஸ்லாமியர்களின் வாழ்வியல் கடமைகளில் முக்கியமானதாக ஹஜ் யாத்திரை இருக்கிறது. இதற்காக ஆண்டுதோறும் இஸ்லாமியர்கள் சவுதி அரேபியாவின் மக்கா, மதீனாவுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் இந்தாண்டு திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஹஜ் செல்வோருக்கான பயிற்சி முகாம் திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி குழு ஒருங்கிணைப்பு சார்பில் திங்கட்கிழமை நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி மாநில தலைவரும், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான ப. அப்துல் சமது மொஷின் சாகிப், ராஜா முஹம்மது, சம்சுதீன், மாமன்ற உறுப்பினர் பைஸ் அஹமது உட்பட பலர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்கள்.
பின்னர் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி மாநில தலைவரும், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான ப. அப்துல் சமது செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
"வரும் மே 26ம் தேதி முதல் விமானம் ஹஜ் பயணம் மேற்கொள்ள சவூதி அரேபியா புறப்பட உள்ளது. ஜூலை மாதம் 9ம் தேதி வரை விமானங்களில் இஸ்லாமியர்கள் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள சவூதி அரேபியா மக்காவை நோக்கி செல்ல உள்ளனர். இவர்களோடு தன்னார்வலர்களும், அரசு சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களும் ஹஜ் கமிட்டியோடு இணைந்து செயல்பட உள்ளனர். இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள இதுவரை 5 ஆயிரத்து 637 பேர் செல்ல தயாராக உள்ளனர்.
கடந்தாண்டை காட்டிலும் இவ்வாண்டு கூடுதலாக 1000 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள பதிவு செய்துள்ளனர். இதில் கணிசமான வகையில் பெண்களாவார்கள். அரசின் மானியம் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது" என்று கூறியுள்ளார்.
ராஜஸ்தான் தேர்தல் பிரச்சாரத்தில் இந்துக்கள் சொத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுத்து விடுவார்கள் என மோடி பிரச்சாரம் செய்துள்ளார் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "தேர்தல் கமிஷன் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கருத்தாகும்" என்றும் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications