ஃப்ரிட்ஜில் வைத்த ”நூடுல்ஸ்” - சாப்பிடவுடன் சுருண்டு விழுந்து இறந்த குழந்தை - திருச்சியில் சோகம்
திருச்சி: அருகே முதல் நாள் சமைத்த நூடுல்சை சாப்பிட்ட 2 வயது குழந்தை உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் நம்பர் ஒன் டோல்கேட் பகுதியை அடுத்துள்ள தாளக்குடியை சேர்ந்தவர் சேகர். இவருக்கு மகாலெட்சுமி மனைவியும் சாய் தருண் என்ற 2 வயது ஆண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் குழந்தை சாய் தருணுக்கு நேற்று இரவு மகாலெட்சுமி நூடுல்ஸ் சமைத்து கொடுத்துள்ளார்.
மீதமுள்ள நூடுல்ஸை குளிர்சாதன பெட்டியில் வைத்த அவர், மீண்டும் இன்று காலையில் அதே நுாடுல்ஸை குழந்தைக்கு உணவாக கொடுத்தார். இதனை சாப்பிட்ட குழந்தை மதியம் வரை வேறு எந்த உணவையும் சாப்பிடாமல் உடல் சோர்வாக காணப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாலை குழந்தை திடீரென வாந்தி எடுத்து சுருண்டு கீழே விழுந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த தாய் மகாலெட்சுமி குழந்தையை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றார். குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த கொள்ளிடம் காவல்துறையினர் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் அலர்ஜியால் பாதிக்கப்பட்டிருந்த குழந்தை நூடுல்ஸை உண்டதால் உணவு ஒவ்வாமை ஏற்பட்டு இறந்திருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications