20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் கொடுக்க போறோம்.. திருச்சியில் ஸ்டாலின் கொடுத்த அப்டேட்.. எப்போது?
திருச்சி: தமிழ்நாட்டில் 20 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் லேப்டாப் கொடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன் மூலமாக இன்னும் 3 மாதங்களுக்குள் லேப்டாப் கொடுக்கும் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் இலவச லேப்டாப் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில், 2018ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது நிதி பற்றாக்குறை காரணமாக நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக உயர்கல்விக்கு செல்லும் மாணவர்கள் லேப்டாப் வாங்குவதற்கான பெரிய தொகையை செலவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

லேப்டாப் திட்டம்
இந்த நிலையில் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக அரசின் பட்ஜெட்டில் 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு லேப்டாப்பின் மதிப்பும் ரூ.20 ஆயிரமாக இருக்கும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். இதற்காக ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதோடு, தேவையென்றால் கூடுதல் நிதியும் ஒதுக்கப்படும் என்றும் கூறி இருந்தார்.
எப்படி இருக்கும் லேப்டாப்?
தொடர்ந்து 20 லட்சம் லேப்டாப் கொள்முதல் செய்வதற்கான சர்வதேச டெண்டரை எல்காட் நிறுவனம் வெளியிட்டது. அதேபோல் லேப்டாப் 8 ஜிபி ரேம், 256 ஜிபி ஹார்ட் டிஸ்க், 14 அல்லது 15.6 இன்ச் திரை, ப்ளூடூத் 5.0, 5 மணி நேரம் வரை தாங்கும் 4 அல்லது 6 செல் லித்தியன் அயன் பேட்டரி, லேப்டாப்பின் முன்புறம் 720p ஹெச்டி கேமரா, விண்டோஸ் 11 உள்ளிட்ட செயல்திறன் கொண்டதாக வாங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.
வாரண்டி, சர்வீஸ்
லேப்டாப்களுக்கு 1 ஆண்டு வாரண்டி மற்றும் சர்வீஸ் சென்டர் உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த முறை அளிக்கப்பட்ட லேப்டாப்களை தனியார் சர்வீஸ் சென்டர்களில் மாணவர்கள் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனை களையும் வகையில் டெண்டரின் போதே லேப்டாப் சர்வீஸ் மற்றும் வாரண்டி தேவை என்பதிலும் தமிழக அரசு கவனமாக உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் பேச்சு
அதேபோல் லேப்டாப் டெண்டரில் பன்னாட்டு நிறுவனங்களான டெல், ஏசர், லெனோவா, எச்பி உள்ளிட்ட நிறுவனங்கள் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளன. இருந்தாலும் லேப்டாப் எப்போது மாணவர்களுக்கு அளிக்கப்படும் என்ற கேள்வி இருந்து கொண்டே இருந்தது. இந்த நிலையில் ஜமால் முகமது கல்லூரியில் மாணவர்கள் முன் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், விரைவில் 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும்.
லேப்டாப் அப்டேட்
இளைய சமூதாயத்தை அறிவு சமூகமாக வளர்க்க இந்த லேப்டாப் கொடுக்கிறோம் என்று தெரிவித்தார். ஏற்கனவே வேலூரில் மகளிர் உரிமைத் தொகை விடுபட்டவர்களுக்கு செப்டம்பர் மாதத்திற்குள் வழங்கப்படும் என்று ஸ்டாலின் அறிவித்தார். அதற்கேற்ப ஜூலை 15ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் அளிக்கப்பட இருக்கின்றன.
டெண்டர் எப்போது?
தற்போது திருச்சியில் தமிழக அரசின் லேப்டாப் திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் அப்டேட் கொடுத்துள்ளார். ஜூலை 12ஆம் தேதியுடன் லேப்டாப்-க்கான பன்னாட்டு டெண்டர் முடிவடைய உள்ள நிலையில், விரைவில் டெண்டர் இறுதி செய்யப்பட்டு அடுத்தக்கட்ட பணிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications