திருச்சியில் டெபாசிட்டை இழந்த 32 அதிமுக வேட்பாளர்கள்! அதிர்ச்சி விலகாத ரத்தத்தின் ரத்தங்கள்!
திருச்சி: திருச்சி மாநகராட்சியில் 32 அதிமுக வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை இழந்திருப்பது அக்கட்சியின் தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
தோல்வி என்றாலும் கூட ஒரு கவுரமான தோல்வியாக இருந்திருக்க வேண்டுமே தவிர டெபாசிட் தொகையை இழக்கும் அளவுக்கு தோல்வி அடைந்திருக்கக் கூடாது என அதிமுக வேட்பாளர்கள் மீதான தங்கள் அதிருப்தியை கட்சித் தொண்டர்கள் வெளிப்படுத்த தொடங்கியிருக்கின்றனர்.
இதனால் திருச்சி மாநகர மாவட்ட அதிமுக செயலாளரான முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

திருச்சி மாநகராட்சி
திருச்சி மாநகராட்சியில் மொத்தம் உள்ள 65 வாா்டுகளில் போட்டியிட 718 போ் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனா். அதில் தள்ளுபடி மற்றும் வேட்பு மனுவை வாபஸ் பெற்றதன் மூலம் 159 போ் போட்டியிலிருந்து விலகினர். எஞ்சியிருந்த 559 வேட்பாளர்கள் அரசியல் கட்சிகள் சார்பிலும் சுயேச்சையாகவும் போட்டியினர். அதில் 470 வேட்பாளா்கள் தங்களது வைப்புத் தொகையை முற்றிலுமாக இழந்துள்ளனா். அதில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக வேட்பாளர் 32 பேர் என்பது தான் முக்கிய விவகாரமாக பார்க்கப்படுகிறது.

வாஷ் அவுட்
திமுக வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்ட பாஜக, தேமுதிக, நாம் தமிழர், எஸ்.டி.பி.ஐ., மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் வாஷ் அவுட் ஆனதுடன் அனைவரும் தங்கள் டெபாசிட் தொகையையும் பரிதாபமாக பறிகொடுத்துள்ளனர். வெற்றிக்கான வாக்குகளில் மூன்றில் ஒரு பங்கு வாக்கைக் கூட பெறாதவா்களுக்கு வைப்புத் தொகைத் திருப்பித் தரப்படாது என்பது தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளில் ஒன்றாகும்.

2011-ல் மேயர்
கடந்த 2011-ம் ஆண்டு திருச்சி மாநகராட்சி மேயர் பதவியை அதிமுக வகித்ததோடு, 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் திருச்சியில் கணிசமான தொகுதிகளில் அதிமுக வெற்றிபெற்றது. வெல்லமண்டி நடராஜன் 5 ஆண்டுகாலம் அமைச்சராக இருந்தும் திருச்சியில் அதிமுகவை வளர்க்க அவர் எந்தப் பணியும் ஆற்றவில்லையோ என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. இதனிடையே அதிமுக வேட்பாளர்கள் டெபாசிட் இழக்கும் அளவுக்கு நிலைமை மோசமாக இருப்பதை அறிந்து அக்கட்சி தொண்டர்கள் மிகுந்த கவலை கொண்டுள்ளனர்.

வெல்லமண்டி மகன்
திருச்சி மாநகராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் மகன் ஜவஹர்லால் நேரு போட்டியிட்டு தோல்வியை தழுவியிருப்பது குறிப்பிடத்தக்கது. திருச்சி திமுகவின் கோட்டையாக மாறியுள்ளதால் அக்கட்சியின் தொண்டர்களும், நிர்வாகிகளும் உற்சாகத்துடன் வலம் வருகின்றனர்.












Click it and Unblock the Notifications