ரயில்களில் அபாய சங்கிலியை இழுத்த 49 பேர் கைது, ரூ.30 ஆயிரம் அபராதம்.. திருச்சி கோட்டத்தில் அதிரடி
திருச்சி: திருச்சி கோட்டத்தில் நடப்பாண்டில் ரயில்களில் அபாய சங்கிலியை பிடித்து இழுத்த 49 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.30 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் தினமும் 150-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரயில் கையாளப்படுகிறது. பயணிகள் உரிய நேரத்தில், பாதுகாப்புடன் அவர்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு சென்று வருகிறார்கள். ஆனாலும் இந்தியன் ரெயில்வேயில் குறித்த நேரத்தில் ரெயில்களை இயக்குவது சவாலான காரியமாக உள்ளது.

ஒரு சில பயணிகள் ரெயில்களில் அபாய சங்கிலியை பிடித்து இழுப்பது தான் இதற்கு முக்கிய காரணம். ரெயில்கள் தண்டவாளத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் இயக்கப்பட்டு வருகிறது. இது கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படும்.
ஆனால் நியாயமான காரணமின்றி அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயில்களை நிறுத்தினால் இதன் மூலம் உரிய நேரத்தில் இலக்கிற்கு சென்று சேர முடியாது. இதனால் பயணிகள் பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக அபாய சங்கிலியை பிடித்து இழுப்பதற்கு சக பயணி ரயிலில் ஏற முடியாமல்விட்டாலோ, மருத்துவ உதவி தேவைப்பட்டாலோ, தண்ணீர் பாட்டில் அல்லது உணவு பொட்டலங்கள் வாங்க இறங்கி சென்றுவிட்டு மீண்டும் ரயிலில் ஏற முடியவில்லை என்றாலோ அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்திவிடுகிறார்கள்.
இதுபோல் தேவையற்ற காரணங்களுக்காக அபாய சங்கிலியை பிடித்து இழுப்பது சட்டப்படி குற்றம். இதற்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் உண்டு. திருச்சி கோட்டத்தில் நடப்பாண்டில் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை அபாய சங்கிலியை பிடித்து இழுத்த 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
அவர்களிடமிருந்து ரூ.29 ஆயிரத்து 900 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. அபாய சங்கிலியை பிடித்து இழுப்பதால் நேரம் தவறிவிடுவது மட்டுமல்லாமல் ரயில் சேவைகளும் பாதிக்கப்படும்.
ஆகவே ரயில் பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுப்பதை தவிர்த்து அவசர தேவைக்கு ரெயில்வே உதவி எண்-139 அல்லது பாதுகாப்பு உதவி எண்-182 தொடர்பு கொள்ள வேண்டும்.இந்த தகவலை திருச்சி ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications