நாம் தான் பதவிக்கு வந்துவிட்டோமே என்ற மெத்தனம் கூடாது! நிர்வாகிகளுக்கு கிளாஸ் எடுத்த கே.என்.நேரு!
திருச்சி: நாம் தான் பதவிக்கு வந்துவிட்டோமே என்ற நினைப்பில் யாரும் மெத்தனமாக இருந்துவிடக் கூடாது என திமுக நிர்வாகிகளுக்கு பாடம் நடத்தியிருக்கிறார் அமைச்சர் கே.என்.நேரு.
திருச்சி மத்திய மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பூத் கமிட்டி அமைப்பு மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கைப் பணிகளை பார்வையிடுவதற்காக தலைமைக்கழகம் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள அதில் செந்தில்குமார், அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதனிடையே இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் நேரு, அதிமுகவினர் தங்கள் கட்சியில் ஒன்றரை கோடி உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என கூறி வரும் நிலையில் நாம் 2 கோடி பேரை திமுகவில் உறுப்பினராக்கி முதல் இடத்தை அடைய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
அதேபோல் முதலமைச்சர் ஸ்டாலினின் செயல்பாடுகளையும், அவரது நடவடிக்கைகளையும் கண்டு எதிரிகள் அருகில் வரவே யோசிக்கிறார்கள் என்றும் தமிழ்நாட்டில் திமுக தான் இனி எப்போதும் ஆட்சியில் இருக்கும் என்றும் அமைச்சர் நேரு தெரிவித்தார்.
இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம் எனக் கூறிய அவர், ஒவ்வொரு நிர்வாகியும் கட்சிக்கு புதிய உறுப்பினர்களை சேர்க்க உழைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
நாம் தான் பதவிக்கு வந்துவிட்டோமே என்ற மெத்தனத்தில் யாரும் கால் மேல் காலை தூக்கிப் போட்டுக் கொண்டு சும்மா இருக்கக் கூடாது என்று மிக கறாராக அட்வைஸ் செய்த நேரு, நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 தொகுதிகளை நாம் வெல்ல வேண்டும் என திமுக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.
தமிழகம் முழுவதும் நாளை உடன்பிறப்புகளாய் இணைவோம் என்ற முன்னெப்பின் மூலம் திமுகவில் புதிய உறுப்பினர்களை இணைக்கும் பணிகள் தொடங்கவுள்ளன.












Click it and Unblock the Notifications