காலேஜ் ஹாஸ்டலில் மூக்கில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்த உமா.. திருச்சியில் பதற்றம்
திருச்சி : திருச்சியில் பயிற்சி செவிலியர் உமா மர்மமான முறையில் உயிரிழந்தார். விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டாரா என்ற கேள்வி எழுகிறது. இதனிடையே உறவினர்கள் மருத்துவமனயை முற்றுகையிட்டு உமாவின் சாவுக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தியதால் பதற்றமாக உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் ராப்பூசல் பகுதியை சேர்ந்த ரங்கன்- சாரதா. இவர்களது மூத்த மகள் உமா (20) திருச்சி தென்னூர் பகுதியில் உள்ள மகாத்மா கண் மருத்துவமனையில் 3ம் ஆண்டு பயிற்சி செவிலியராக அங்குள்ள மகளிர் விடுதியில் தங்கி படித்து வருகிறார்.
4 மாதங்களுக்கு முன்பு இவரது உறவினர் ஆனந்த் (29) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. கணவர் ஆனந்த் திருச்சியில் உள்ள தனியார் ஹோட்டலில் வேலை செய்து வருகிறார்.
மருத்துவமனையில் உடல்
இந்நிலையில் நேற்று இரவு உமாவின் உறவினரான பிரவீனா என்பவருக்கு மருத்துவமனையில் இருந்து போன் செய்து உமா இறந்துவிட்டதாகவும், மேலும் உமாவின் உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ளதாக சொல்லிவிட்டு போனை துண்டித்தனர்.
மூக்கில் நுரை
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த உமாவின் உறவினர்கள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சென்று உமாவின் உடலை பார்த்தனர். மூக்கில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்த உடலை கண்டு கதறி அழுதனர். மர்மமான முறையில் இறந்த உமாவின் உடலை வாங்க மறுத்தனர்.
போலீசார் பேச்சுவார்த்தை
அத்துடன். திருச்சி தென்னூர் பகுதியில் உள்ள மகாத்மா கண் மருத்துவமனைக்கு சென்று எப்படி இறந்தார் என்று கேட்டதற்கு சரியான பதில் வராததால் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்னர். இதுகுறித்து தகவலறிந்து ஸ்ரீரங்கம் காவல்துறை உதவி ஆனையர் சுந்தரமூர்த்தி உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பிரேத பரிசோதனை
அதில் உமாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு எப்படி இறந்தார் என்பது தெரியவரும் மேலும் ஆர்டிஓ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர். அதன்படி உறவினர்கள் கலைந்து சென்றனர். இந்த நிலையில் பயிற்சி நர்ஸ் உமா உடலின் அருகில் ஊசி ஒன்று இருந்ததால் அவர் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பல்வேறு கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்