திமுகவில் நடிகர் விமல்...? கே.என்.நேருவுடனான சந்திப்பின் பின்னணி என்ன..?
திருச்சி: திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவை அவரது இல்லத்தில் நடிகர் விமல் சந்தித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே இருவரும் ஒரே மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியதாக நடிகர் விமல் விளக்கம் கூறியுள்ளார்.
கொரோனா லாக்டவுன் காரணமாக திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள சொந்தக் கிராமத்தில் தங்கியுள்ள நடிகர் விமல் ஏழை எளியோருக்கு நிவாரண உதவிகள் வழங்கி வருகிறார்.

திருச்சி மாவட்டம்
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள தனது சொந்தக் கிராமத்தில் தங்கியுள்ளார் நடிகர் விமல். கொரோனா லாக்டவுன் காரணமாக தற்போது ஷூட்டிங் எதுவும் இல்லாததால் சொந்த ஊரில் விவசாயம் உள்ளிட்ட பணிகளை கவனித்து வருகிறார். இதனிடையே சுற்றுவட்டார கிராம மக்களுக்கு தன்னால் இயன்ற வரை நிவாரண உதவிகளையும் வழங்கி வருகிறார். நடிக்க வருவதற்கு முன்பே விமல் குடும்பம் வசதியான பின்புலத்தை கொண்டது. இவரது தந்தை லாரிகளை வைத்து இயக்கியுள்ளார்.

திமுகவில் விமல்?
இந்நிலையில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், நடிகர் விமல் தன்னை சந்தித்து பேசிய படங்களை வெளியிட்டிருந்தார். இதையடுத்து அவர் திமுகவில் இணைகிறாரா என்ற கேள்விக்குறியுடன் வாட்ஸ் அப்களில் செய்திகள் உலா வந்தன. இதையடுத்து இது தொடர்பாக விளக்கம் அறிய நடிகர் விமலை தொடர்பு கொண்டு பேசியபோது, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

வாழ்த்துக் கூறினார்
அப்போது அவர் கூறியதாவது,''கட்சியில் இணைவதற்காக நான் நேருவை சந்திக்கவில்லை. இருவரும் ஒரே மாவட்டத்தை சேர்ந்தவர்கள். எனக்கு அண்மையில் குழந்தை பிறந்துள்ளது. அதற்காக அவர் என்னை அழைத்து வாழ்த்துக்கூறினார். நானும் பதிலுக்கு மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து நன்றி கூறிவிட்டு பேசிக்கொண்டிருந்தேன்'' என்றார்.

இளைஞர்கள்
இதனிடையே மணப்பாறை அருகே உள்ள தனது கிராமத்தில் நடிகர் விமல் கிருமிநாசினி மருந்து தெளித்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அவருடன் அந்தப் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பலரும் தன்னார்வமாக இணைந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கின்றனர்.












Click it and Unblock the Notifications