மெசேஜ் மூலம் உதவி கோரிய மாற்றுத்திறனாளி... வீடு தேடிச்சென்று நிவாரணப்பொருட்கள் வழங்கிய அன்பில் மகேஷ்
திருச்சி: திருச்சி மாவட்டம் மருங்காபுரியை சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் குறுந்தகவல் (மெசேஜ்) மூலம் உதவி கோரிய நிலையில், அந்த இளைஞரை நேரில் சென்று சந்தித்து நிவாரணப் பொருட்கள் வழங்கினார் அன்பில் மகேஷ் எம்.எல்.ஏ.
திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளரும், திருவெறும்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான அன்பில் மகேஷ் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி வருகிறார். தனது சொந்த நிதியிலேயே அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைகளை திருவெறும்பூர், திருச்சி கிழக்கு, மணப்பாறை ஆகிய தொகுதிகளுகுட்பட்ட பல இடங்களில் விநியோகித்து வருகிறார்.

இதனிடையே துவரங்குறிச்சி அருகே உள்ள மருங்காபுரியில் இருந்து மாற்றுத்திறனாளி இளைஞர் விஜய் என்பவர் ஊரடங்கால் தங்கள் குடும்பத்திற்கு வாழ்வாதாரம் இல்லை என்றும், உணவுக்கே சிரமப்பட வேண்டியுள்ளதாகவும் அன்பில் மகேஷ் அலைபேசி எண்ணுக்கு நேற்று மெசேஜ் (குறுந்தகவல்) அனுப்பியிருந்தார். அதனை பார்த்த அன்பில் மகேஷ் இன்று 55 கி.மீ. பயணித்து நேரடியாக அந்த இளைஞரை வீடு தேடிச்சென்று சந்தித்து அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு பையை வழங்கினார். மேலும், அந்த இளைஞருக்கு தைரியமும், தன்னம்பிக்கையும் அளிக்கும் வகையில் ஊக்கப்படுத்தினார்.
இதனை பார்த்த மருங்காபுரி பகுதி மக்களும், திமுக நிர்வாகிகளும் நெகிழ்ந்தனர். நிர்வாகிகளை அனுப்பி உதவி செய்வார் என எதிர்பார்த்ததாகவும், ஆனால் அவரே நேரில் வந்தது தாங்களே எதிர்பார்க்காத ஒன்று எனவும் மாற்றுத்திறனாளி இளைஞர் விஜயின் குடும்பத்தினர் தெரிவித்தனர். இதனிடையே சுட்டெரிக்கும் வெயிலில் தூய்மை பணி மேற்கொள்ளும் துப்புரவு பணியாளர்களின் தாகம் தீர்க்கும் வகையில் அவர்களுக்கு அன்பில் மகேஷ் எம்.எல்.ஏ. நேற்று குளிர்பானம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications