ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து நடன கலைஞர் ஜாகீர் உசேன் வெளியேற்றம்! வெடித்த சர்ச்சை.. என்ன நடந்தது?
திருச்சி: மாற்று மதத்தைச் சேர்ந்தவன் என்பதால் திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து தான் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாகவும் தனக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் பரத நாட்டிய கலைஞர் ஜாகீர் உசேன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள மிகவும் புகழ்பெற்ற பரத நாட்டிய கலைஞர்களில் ஒருவர் ஜாகீர் உசேன். இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த இவருக்கு நடனத்திற்காகத் தமிழ்நாடு அரசு சார்பில் பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த காலங்களில் பல்வேறு கோயில்களிலும் இவர் பரதநாட்டியம் அரங்கேற்றம் செய்துள்ளார். சிறு வயதில் இருந்தே வைணவத்தை மதத்தை ஏற்றுள்ள இவர், இந்து கோயில்களுக்குச் செல்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார்.

ஜாகீர் உசேன்
குறிப்பாகத் திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் செல்வதைப் பல ஆண்டுகளாக அவர் வழக்கமாகக் கொண்டுள்ளார். மேலும், ஸ்ரீரங்கம் கோயிலை ஆய்வு செய்த அவர், ஸ்ரீரங்க நாயக்கம் என்ற நாட்டியத்தையும் அரங்கேறியுள்ளார். மேலும், அங்குள்ள ராமானுஜர் சன்னதியில் யதிராஜ வைபவமும் செய்துள்ளார். இந்தச் சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன், இவர் திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சென்றுள்ளார்.

வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டேன்
அப்போது அங்கு இருந்த ரங்கராஜன் என்ற நபர், இவரைத் திட்டியபடியே வெளியேற்றியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், "நான் என் தாய்வீடாகக் கருதும், தினம் என் நாவிலும் நெஞ்சிலும் ஏற்றித் தொழும் தென்னரங்கனை என்னரங்கனாக கணப்பொழுதும் மறவாது கருதிக் கொண்டிருக்கும் திருவரவங்கத்திலிருந்து ஒரு மத வெறியனால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டேன். காரணம் என் பெயர்.
நடவடிக்கை தேவை
முதன்முறையாக நான் இம்மதத்திற்கு தொடர்புடையவன் அல்ல என ஒரு மிகப்பெரும் சமூகமே பார்த்துக் கொண்டிருக்க அரங்கனைக் காண தடைசெய்யப்பட்டு, பல அவமானங்களுக்கிடையே துரத்தப்பட்டேன். இக்காயம் என்னை என்றென்றும் உறுத்திக் கொண்டே இருக்கும். ஆனாலும் என் பற்று அரங்கனையும் ஆண்டாளையும் விட்டு அணு அளவும் அகலாது. என்னை துரத்தியவன் ஒரு நடத்தை கெட்டவன் மட்டுமல்ல. இந்நாட்டின் இறையாண்மைக்கும் மத நல்லிணக்கத்திற்கும் எதிரானவன். காலம் , திருப்பாணனை உள்ளழைத்தது போல் என்னையும் என் நம்பிக்கையையும் ஒருநாள் ஏற்கும். அரங்கன் என்றும் எமக்குத் துணை" என்று தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பலரும் வலியுறுத்தல்
இந்தச் சம்பவத்தால் ஜாகீர் உசேனுக்கு கடும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் நேற்று இரவு திடீரென ஜாகீர் உசேனுக்கு ரத்த அழுத்தம் மற்றும் தலைசுற்றல் ஏற்படவே, ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இணையத்தில் பலரும் ஜாகீர் உசேனுக்கு ஆதரவாகக் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மிகச் சிறந்த பரத நாட்டிய கலைஞர்களில் ஒருவரான ஜாகீர் உசேனை மதத்தின் பெயரால் அவமானப்படுத்தியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் அவருக்கு ஆதரவாகக் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

யாரும் மிரட்டியதில்லை
இது தொடர்பாகத் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியிலும் கூட, "நான் 8 வயதில் இருந்தே பல கோயிலுக்கு சென்று வருகிறேன். ஆனால் முதல் முறை மதத்தின் அடிப்படையில் தடுத்து நிறுத்தியது, மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. நான் பிறப்பாக ஒரு இஸ்லாமியனாக இருக்கலாம். ஆனால், சிறு வயதில் இருந்தே பெருமாளை வணங்கி வருகிறேன். என்னை இஸ்லாம் மதத்தில் இருந்தும் சரி, இந்து மதத்தில் இருந்தும் சரி யாரும் மிரட்டியதில்லை.

கொலை மிரட்டல்
கடந்த சில நாட்களுக்கு முன் நான் பெருமாளை வணங்கச் சென்றபோது. முஸ்லீம் நீ எப்படி உள்ளே வரலாம் என்று கூறி, ரங்கராஜன் என்ற நபர் கழுத்தைப் பிடித்து நெட்டி தள்ளினார். கிளிமண்பத்தில் இருந்து கோபுரம் வரை கோயிலே கேட்கும்படி, வெளியே போ என்று என் பின்னால் கத்திக் கொண்டே வந்தார். மேலும் கொலை மிரட்டல் விடுக்கும்படியும் பேசிய அவர், என்னைத் தொடர்ந்து மிரட்டியும் வந்தார்.அந்த நபர் திட்டமிட்டு இதுபோன்று செய்துள்ளார். இது தொடர்பாகப் புகார் அளித்துள்ளேன். இது தொடர்பாக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத நல்லிணக்கம்
நாட்டில் மத நல்லிணக்கம் பாதுகாக்கப்பட வேண்டும். கடவுளை நம்புகிறவர்கள் யாராக இருந்தாலும் கோயிலுக்கு அனுப்பலாம். மத நல்லிணக்கம் காரணமாகவே கொரோனா மற்றும் மழை வெள்ள காலங்களில் இஸ்லாமியர்கள் உதவினார்கள். திருவல்லிக்கேணி கோயிலுக்குக் கூட சென்று ஆலயத்தைச் சுத்தப்படுத்தினர்" என்று கூறினார். இச்சம்பவம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

கோயில் நிர்வாகம் விளக்கம்
அதில் ஜாகீர் உசேனை ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து வெளியேற்றப்பட்ட சம்பவத்திற்கும் கோவில் நிர்வாகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் கோயில் பணியாளர்கள் யாரும் ஜாகீர் உசேனை தடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளது. மேலும், ரங்கராஜன் என்ற நபருக்கும் ஜாகீர் உசேனுக்கும் இடையே நடந்த வாக்குவாதம் தொடர்பாக விசாரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications