திருச்சி திமுக மாநாட்டில் கமகமக்கும் பிரியாணி.. 10 லட்சம் பேருக்கு சுடச்சுட ரெடி!
திருச்சி: திமுகவின் 12-வது மாநில மாநாட்டிற்கு வரும் கட்சி நிர்வாகிகளுக்காக பிரம்மாண்டமான முறையில் பிரியாணி தயார் செய்யப்பட்டு உள்ளது. திருச்சியில் இன்று நடைபெறும் இந்த மாநாட்டிற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அவர்களுக்கான உணவு ஏற்பாடுகள் மிக விரிவாக செய்யப்பட்டுள்ளன.
தமிழக சட்டசபை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சட்டசபை தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினரும் தீவிரமாக தேர்தல் களப்பணி ஆற்றி வருகின்றனர். மேலும் மாநாடு, பொதுக் கூட்டங்களை தொடர்ச்சியாக நடத்தி வருகின்றனர். அந்த வகையில் திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு நடைபெற உள்ளது.

திருச்சி சிறுகனூரில் இன்று மாலை நடைபெறும் இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி பேச உள்ளார். இந்த மாநாட்டில் திமுக நிர்வாகிகள் 10 லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என்று திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாநாட்டில் பங்கேற்கும் திமுக நிர்வாகிகளுக்காக மதிய உணவு முழுவீச்சில் தயார் செய்யப்பட்டுள்ளது. மாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்கு சைவ, அசைவ உணவுகள் தயார் செய்யப்பட்டுள்ளன. அதன்படி மாநாட்டில் பங்கேற்க வருவோருக்கு அசைவத்தில் கமகமக்கும் மட்டன் பிரியாணி, சிக்கன் 65 ஆகிய உணவுகள் தயாராகி உள்ளது.
அதன்படி, 10 லட்சம் பேருக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கிலோ மட்டன், 80 ஆயிரம் கிலோ சிக்கன் மூலம் உணவு தயாரிக்கப்படுகிறது. மட்டன் பிரியாணி, சிக்கன் 65, தால்சா ஆகியவை தயார் செய்யப்பட்டு டப்பாக்களில் பேக்கிங் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டன. சைவத்திலும் உணவு தயார் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
வெளி மாவட்டங்களை சேர்ந்த தொண்டர்கள் நேற்று இரவு முதல் பல்வேறு பகுதிகளில் இருந்து பஸ், வேன், கார்களில் மாநாட்டுத் திடலில் குவிந்தனர். இதனால் முன்னேற்பாடாக வெளியூர்களில் இருந்து வருகை தரும் தொண்டர்களின் பசி போக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. 4 இடங்களில் சுமார் 2 லட்சம் பேருக்கு உணவுகள் வழங்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications