துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின்! அது ஒன்னும் தப்பில்லையே.. சைலண்ட் டோனில் அட்டாக் செய்த பாஜக
திருச்சி: உதயநிதி துணை முதல்வராக ஆவதில் தவறில்லை தமிழக மக்கள் அதையும் பார்க்கட்டும் என்றும், தமிழக அமைச்சர்கள் மீதான வழக்கு விசாரணையில் மத்திய பாஜக அரசின் தலையீடு இல்லை எனவும் பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கம் கூறியுள்ளார்.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மை இடங்களை வென்று ஆட்சியை பிடித்திருக்கிறது. திமுக ஆட்சிப்பொறுப்பேற்று ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் கழித்து உதியநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. அப்போதிருந்து அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று கட்சிக்குள் பேச்சு அடிப்பட்டது. அமைச்சர் சிலர் உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என்று வெளிப்படையாக கூறியிருந்தனர்.

இந்நிலையில் பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம், "உதயநிதி துணை முதல்வராக ஆவதில் தவறில்லை" என்று கூறியுள்ளார். திருச்சி பாஜக மாவட்ட தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார். அவர் பேசியதாவது, "மக்கள் விரோதச் செயல்களை செய்துவரும் தமிழக திமுக அரசு, அதிலிருந்து மக்களை திசைதிருப்பவே மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்படுவதாக பொய் கூறி போராட்டம் நடத்துகிறது. இது புதிய வரிகளால் தமிழக மக்கள் பாதிக்கப்படுவதை மறைக்க நடத்தும் நாடகம்.
திமுக கூறுவது உண்மையாக இருந்தால், மத்திய அரசு எந்தெந்தத் துறைகளுக்கு நிதியைக் குறைத்துள்ளது எனப் பட்டியலிட்டு மக்களிடம் கூறலாமே. மத்திய அரசின் வலிமையை குறைத்துக்காட்டுவது தேச விரோதம்தான்.
ஆந்திரத்துக்கு ரூ.15 ஆயிரம் கோடி சிறப்பு நிதி வழங்கியுள்ளதாக திமுக கூறுகிறது. ஆனால் அந்த நிதி, திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியில் ஒப்புக்கொண்ட நிதிதான். அதுவும் தலைநகரங்களை மாற்றியதற்காக வழங்கிய நிதி. இதேபோல, தமிழகத்திலும் 3 தலைநகரங்கள் அமைக்கப்பட்டால், மத்திய அரசு பாஜக அரசு நிதி வழங்கும்.
உதயநிதி துணை முதல்வராக ஆவதில் தவறில்லை. தமிழக மக்கள் அதையும் பார்க்கட்டும். திமுக அமைச்சர்கள் மீதான வழக்கு விசாரணையில் மத்திய பாஜக அரசின் தலையீடு இல்லை. தமிழகத்திலிருந்து திமுகவை அகற்றுவதே பாஜகவின் லட்சியம். அதை நோக்கிப் பயணிப்போம்" என்று கூறினார்.
சமீப காலமாக தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் மீது கடந்த காலங்களில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதியப்பட்டது. ஆனால், போதிய ஆதாரங்கள் இல்லை என்று இவர்கள் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் நோக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்குகளை விசாரணைக்கு எடுத்திருக்கிறது. அதாவது கடந்த 2006-2011ம் ஆண்டுகளில் ரூ.44.59 லட்சம் அளவுக்கு வருமானத்தை மீறி சொத்து சேர்த்துள்ளதாக கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், அவரது மனைவி மற்றும் நண்பர் என மூன்று பேர் மீது விருதுநகர் மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிப்புத்தூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.
அதேபோல 2006-2011 காலங்களில் அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மீது ஊழல் தடுப்பு போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். ஆனால், போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி இந்த வழக்கையும் ஸ்ரீவில்லிப்புத்தூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இப்படி இருக்கையில் இவர்கள் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications