அடித்துப் பிடித்து அனுமதி வாங்கியும் ஜேபி நட்டா ‘ரோடு ஷோ’ ரொம்ப தாமதம்.. நேரத்தை கடந்ததால் பரபரப்பு!
திருச்சி: திருச்சியில் ஜேபி நட்டாவின் ரோடு ஷோவுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நேரம் கடந்த நிலையில் ரோடு ஷோ நடத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் மிகவும் தாமதமாக நட்டாவின் ரோடு ஷோ தொடங்கியது.
பாஜக தேசியத் தலைவர் நட்டா, இன்று திருச்சியில் சுமார் 1.2 கி.மீ தூரம் ரோடு ஷோ செல்ல பாஜக திட்டமிடப்பட்டது. திருச்சியில் நட்டாவின் ஷோவுக்கு பாஜக அனுமதி கோரிய நிலையில், போக்குவரத்து நெரிசலை காரணம் காட்டி திருச்சி மாநகர காவல்துறை அனுமதி மறுத்தது. இதையடுத்து உடனடியாக நீதிமன்றப் படி ஏறியது பாஜக.

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பாஜக தாக்கல் செய்த மனுவில், "நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை பிரச்சாரம் மேற்கொள்கிறார். இன்று மாலை 4.30 மணி முதல் 7 மணி வரை திருச்சி காந்தி மார்க்கெட் முதல் மலைக்கோட்டை வரை 'ரோடு ஷோ' நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக முறையாக அனுமதி கோரி தேர்தல் அலுவலர் மற்றும் காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால், இதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பிரசாரத்துக்காக பயன்படுத்தப்படும் Isuzu goods வாகனம் நிரந்தரமாக பதிவு செய்யாமல் இருப்பதால் அனுமதி வழங்க இயலாது எனக்கூறி ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த வாகனம் கடந்த மார்ச் 18ஆம் தேதிதான் வாங்கப்பட்டது. இதனை கருத்தில் கொள்ளாமல் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் இருந்து மலைக்கோட்டை வரை 'ரோடு ஷோ' நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் கோரப்பட்டது.
இந்த வழக்கு அவசர வழக்காக விடுமுறை தினமான இன்று நீதிபதி முரளிசங்கர் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் செந்தில் குமார் ஆஜராகி, "'ரோடு ஷோ' நடைபெற தேர்வு செய்யப்பட்ட பாதை பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தும் நடை பாதையாக உள்ளது. இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் அந்தப் பாதையில், பல்வேறு மத வழிபாட்டுத்தலங்கள் உள்ளன. எனவே, அந்த பகுதியில் அனுமதி வழங்க முடியாது" என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மேலும் திருச்சி கண்ணப்பா ஹோட்டல் முதல் இஎஸ்ஐ மருத்துவமனை வரை மாற்று பாதையில் 'ரோடு ஷோ' நடத்த அனுமதி வழங்கப்படுவதாக அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி மாற்றுப் பாதையான கண்ணப்பா ஹோட்டல் முதல் இஎஸ்ஐ மருத்துவமனை வரை மாலை 4 மணி முதல் 6 மணி வரை,'ரோடு ஷோ' நடத்திக் கொள்ள அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
இந்நிலையில், 6 மணி வரை தான் ரோடு ஷோவுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் 7 மணி வரை நட்டாவின் ரோடு ஷோ தொடங்கவே இல்லை. நட்டா ரோடு ஷோ செல்லும் பாதையில் இரு புறமும் நிறுத்துவதற்கு ஆட்கள் இல்லாததால் நட்டாவின் ரோடு ஷோ திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற சந்தேகம் நிலவியது.
இன்று காலையில் அரியலூரிலும், கரூரிலும் பாஜக தேசிய தலைவர் நட்டா பங்கேற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களின் போது ஏராளமான இருக்கைகள் காலியாக இருந்தன. எதிர்பார்த்தபடி கூட்டம் வராத நிலை இருந்தது. இந்த சூழ்நிலையில், ரோடு ஷோவுக்கு வழங்கப்பட்ட அனுமதி நேரம் கடந்ததால் திருச்சியில் ரோடு ஷோ நடத்தப்படுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் வெகு தாமதமாக, நட்டாவின் ரோடு ஷோ திருச்சியில் தொடங்கியுள்ளது. மாலை 4 மணி முதல் 6 மணி வரை நட்டாவின் ரோடு ஷோவுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், சுமார் 7.30 மணி அளவில் ரோடு ஷோவை தொடங்கினார் நட்டா. பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பாஜகவினர் முழக்கம் எழுப்பியபடி நடந்து சென்றனர். உறையூர் நாச்சியார் கோவில் வரை இந்த ரோடு ஷோ நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications