சுஜித்தின் பெற்றோரை நேரில் சந்தித்து முதல்வர் பழனிச்சாமி ஆறுதல்.. ரூ.20லட்சம் நிதியுதவி அறிவிப்பு
திருச்சி: ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சுஜித்தின் பெற்றோரை நேரில் சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆறுதல் தெரிவித்தார்.
மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது குழந்தை சுஜித்தை மீட்க 5 நாட்களாக மீட்புக் குழுவினர் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.
இன்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்ட சுஜித் உடல், பிரேத பரிசோதனைக்குப் பிறகு அடக்கம் செய்யப்பட்டது. சுஜித்தின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு பல்வேறு தரப்பினரும் ஆறுதல் கூறிவருகின்றனர்.
இந்நிலையில், மணப்பாறையில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து இறந்த சுஜித்தின் வீட்டுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் ஆகியோர் இன்று நேரில் சென்றனர். சுஜித் வீட்டில் வைக்கப்பட்ட்டிருந்த சுஜித்தின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, சுஜித்தின் பெற்றோரை சந்தித்த முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் ஆறுதல் தெரிவித்தனர்.
அதிமுக 10லட்சம்
அப்போது முதல்வர் பழனிச்சாமி கூறுகையில், "சுஜித்தின் பெற்றோருக்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து 10 லட்சம் ரூபாய் அளிக்கப்படும். இதேபோல் அதிமுக சார்பிலும் 10 லட்சம் ரூபாய் நிவாரணம் நிதி வழங்கப்படும்.
2009 சம்பவம்
குழந்தையை உயிரோடு மீட்க அரசு இயந்திரங்கள் முழுமையாக பயன்படுத்தப்பட்டன. பல்வேறு நடவடிக்கை எடுத்தும் முயற்சிகள் பலனளிக்கவில்லை. எல்லாம் தெரிந்த விஞ்ஞானி போல் பேசுகிறார் மு.க.ஸ்டாலின். அதேபோல் 2009 திமுக ஆட்சியில் தேனியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6வயது சிறுவனை உயிருடன் மீட்க ராணுவம் அழைக்கப்பட்டதா என திமுக தலைவர் ஸ்டாலின் இதற்கு பதில் சொல்லட்டும். ஸ்டாலின் சொல்வது அத்தனையும் பொய். தவறான கருத்தை பேசினார்.அரசு சிறப்பாக செயல்பட்டதாக வைகோ உண்மையை சொல்லியிருக்கிறார். அவரது பாராட்டுக்கு நன்றி.
அமைச்சர்கள் முகாம்
2009ம் ஆண்டில் தேனி மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த போது துணை முதல்வராக இருந்த ஸ்டாலின் சென்று பார்த்தாரா. இப்போது துணை முதல்வர் பன்னீர்செல்வம் இங்கு வந்து பணியில் ஈடுபட்டார். என்னுடைய உத்தரவின் பேரில் அமைச்சர்கள் முகாமிட்டு நிவாரண பணிகளை பார்வையிட்டனர்.
மீட்க முடியவில்லை
2009ல் திமுக ஆட்சியில் இருந்த போது எந்த தொழில்நுட்பத்தை திமுக தலைவர் ஸ்டாலின் பயன்படுத்தினார். ஸ்டாலின் அரசியலுக்காக பொய்யான கருத்துக்களை பேசுகிறார். நாங்கள் எல்லா தொழில்நுட்பத்தை அலசி ஆராய்ந்து தான் தொழில்நுட்பங்களை பயன்படுத்தினோம். குழந்தை சுஜித்தை மீட்க அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டோம். ஆனால் துரதிஷ்டவசமாக குழந்தையை உயிருடன் மீட்க முடியவில்லை. இது எங்களுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது. அதற்காக வருந்துகிறோம் என முதல்வர் பழனிச்சாமி தெரிவித்தார்.