மணப்பாறை முறுக்கிற்கு மலைபோல் குவிந்த தீபாவளி ஆர்டர்! தினமும் 40 கிலோ முதல் 100 கிலோ வரை தயாரிப்பு
திருச்சி: முறுக்கு வகைகளின் ராஜாவாக திகழும் மணப்பாறை முறுக்கிற்கு தமிழகம் எங்குமிருந்து தீபாவளி ஆர்டர்கள் மலை போல் குவிந்துள்ளதால் டன் கணக்கில் முறுக்குகளை தயாரித்து தினமும் அனுப்பப்பட்டு வருகின்றன.
திருச்சி -திண்டுக்கல் இடையே அமைந்துள்ள மணப்பாறையை பேருந்திலோ, ரயிலிலோ, காரிலோ கடக்கும் போது கண்ணில் முறுக்கு பாக்கெட்களை பார்க்காமல் யாரும் கடந்து செல்ல முடியாது. அந்தளவுக்கு மணப்பாறையை சுற்றி முறுக்கு கடைகளும், முறுக்கு தயாரிப்பு இடங்களும் உள்ளன. பத்து ரூபாய் பாக்கெட்டில் கூட முறுக்கு கிடைப்பதால் சும்மா ஒரு பாக்கெட் வாங்கி டேஸ்ட் செய்து பார்ப்போம் என முதல்முறையாக வாங்குபவர்கள் கூட அடுத்த முறை மணப்பாறை பக்கம் செல்ல நேர்ந்தால் பாக்கெட் பாக்கெட்களாக முறுக்குகளை வாங்கிச் செல்வார்கள்.

காரணம் அந்தளவுக்கு முறுக்கின் ருசி இருப்பதேயாகும். அரிசி முறுக்கின் சுவைக்கு காரணம் மணப்பாறை தண்ணீர் என்கிறார் முறுக்கு தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வரும் கோவிந்தராஜ். ராகி முறுக்கும், தேங்காய் பால் முறுக்கு, புதினா முறுக்கு, கார முறுக்கு என காலத்திற்கேற்றார் போல் மணப்பாறை முறுக்குகளில் பல வகைகளை தயாரித்து தமிழகமெங்கும் அனுப்பி வைப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
தீபாவளி பலகாரங்களில் மணப்பாறை முறுக்கு தனி இடம் வகிக்கத் தொடங்கியிருப்பதாகவும் தினமும் 40 கிலோ முதல் 100 கிலோ வரை தங்கள் கடையில் முறுக்கு தயாரித்து சப்ளை செய்வதாக முறுக்கு வியாபாரி கோவிந்தராஜ் தெரிவிக்கிறார். அரிசி மாவுடன் சீரகம், ஓமம், எள், ஆகியவற்றையும் சேர்த்து முறுக்கு சுடுவதால் அதன் ருசியும், சுவையும் நாவூறச் செய்யும் என்கிறார் மற்றொரு முறுக்கு வியாபாரி. மேலும் எல்லாவற்றுக்கும் மேலாக கைப்பக்குவம் ரொம்ப முக்கியம் என்றும் கூறுகிறார் அவர்.

மணப்பாறை பகுதியில் நேரடியாகவும் , மறைமுகமாகவும் முறுக்குத் தொழிலை நம்பி 5,000 குடும்பங்கள் இருப்பதாகவும் காலம் காலமாக முறுக்கு பிழிவதே தொழில் என்பதால் முறுக்கிற்கு மாவு தயார் செய்வது முதல் அதனை பதமாக பொரித்து எடுப்பது வரை அவர்களுக்கு கை வந்த கலையாக பார்க்கப்படுகிறது. இந்தாண்டு தீபாவளி பண்டிகையை ஒட்டி மணப்பாறையிலிருந்து மட்டும் தமிழகம் மற்றும் வெளிநாடுகளுக்கு ஆயிரம் கிலோவுக்கு மேல் முறுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

தினமும் எண்ணெய்யை மாற்றிவிடுவோம் என்றும் அன்றாடம் முறுக்கிற்கு தேவையான மாவை புதுசு புதுசாக தயாரித்து ஸ்டாக் வைக்காமல் முறுக்கை விற்றுவிடுவோம் எனவும் தெரிவிக்கிறார்கள் மணப்பாறை பகுதியை சேர்ந்த முறுக்கு உற்பத்தியாளர்கள். முறுக்கு சுடுவதை விட்டால் வேறு தொழில் தெரியாது என நூற்றுக்கணக்கானோர் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தாண்டு தீபாவளிக்கு ஸ்பெஷலாக நெய் கலந்து தயாரிக்கப்பட்ட அரிசி முறுக்கிற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளதாம்.












Click it and Unblock the Notifications