திருச்சியில் திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு... வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு
திருச்சி: ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் வெற்றி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு திருச்சியில் நடைபெற்று வருகிறது.
அதில் தமிழகம் முழுவதும் இருந்தும் திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர். சிலருக்கு மட்டும் ஸ்டாலின் முன்னிலையில் மேடையில் பேசுவதற்கு வாய்ப்பு தரப்பட்டது.
திமுக மாநாடு சரியாக 9.30 மணிக்கு தொடங்கும் என மாநாட்டு ஏற்பாட்டாளரும், முதன்மைச் செயலாளருமான கே.என் நேரு கூறியிருந்த நிலையில் 10 மணிக்கு தான் மாநாடு தொடங்கியது.
அடேங்கப்பா! திமுக வரலாற்றில் முதல் முறையாக குத்துவிளக்கு ஏற்றல்- மங்கல இசை.. திருச்சியில் திருப்பம்!
திமுக மாநாடு
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் வெற்றிபெற்றவர்களை சந்திக்கும் வகையிலும், அவர்களுக்கு சில அறிவுரைகள் வழங்கும் நோக்கிலும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்தது திமுக தலைமை. இதற்கான பொறுப்பு திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளரும், முதன்மைச் செயலாளருமான கே.என்.நேருவிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரும் ஒரு வாரத்திற்குள் அதற்கான ஏற்பாட்டை பிரம்மாண்டமாக தனது கல்லூரி வளாகத்திலேயே செய்து முடித்தார். மாநாடு திடலை நேற்றிரவு பார்வையிட்ட ஸ்டாலின் நேருவை பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
சிலருக்கு வாய்ப்பு
பெரியார், அண்ணா, கலைஞர், படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்பு காலை 10 மணிக்கு மாநாடு தொடங்கியது. திமுக தலைமைக்கழகம் சார்பில் மு.க.ஸ்டாலினுடன், பொருளாளர் துரைமுருகன், துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, உள்ளிட்டோர் மாநாட்டில் பங்கேற்றனர். மாநாட்டு மேடையில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பேசுவதற்கு ஒரு சில உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மட்டும் 2 முதல் 3 நிமிடம் வரை நேரம் கொடுக்கப்பட்டது.
பதற்றம்
மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பேசிய உள்ளாட்சி பிரதிநிதிகள் பலரும், தடுமாற்றத்துடன் ஒரு வித பதற்றத்துடன் காணப்பட்டனர். சிலர் எழுதிவைத்ததை கடகடவென படித்துச் சென்றனர். சிலர் திக்கி திணறி சொதப்பவும் செய்தனர். இதனை பார்த்தவுடன் மேடையில் அமர்ந்திருந்த கே.என்.நேரு பேச்சை முடித்துக்கொள்ளுமாறு அருகில் எழுந்து சென்று கூறினார். ஆனால், அவர்களுக்கு தெரிந்ததை பேசட்டும் தடுக்க வேண்டாம் என ஸ்டாலினும், துரைமுருகனும் கூறினர். மாநாடு தொடங்கிய சிறிது நேரத்திலேயே தங்கள் இருக்கைகளை விட்டு எழுந்து சென்ற உள்ளாட்சி பிரதிநிதிகளையும் காண முடிந்தது.
இருக்கைகள்
அனைத்து மாவட்டச் செயலாளர்களும் தங்கள் மாவட்டத்தை சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகளை 8.30 மணிக்கே மாநாட்டுத்திடலில் அமரவைத்துவிட்டனர். ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர்கள், மாவட்ட பஞ்சாயத்து தலைவர், துணைத் தலைவர், ஒன்றிய தலைவர், துணைத்தலைவர், மாவட்டச் செயலாளர்கள் ஆகியோருக்கு தனித்தனியாக பகுதிகள் அமைக்கப்பட்டு இருக்கைகள் போடப்பட்டன. ஆனால் கூட்டத்தில் அதையெல்லாம் யாரும் சட்டைசெய்யவில்லை. கிடைத்த இடத்தில் அவரவர்கள் அமர்ந்துகொண்டனர்.