முக்கொம்பு அணை உடைஞ்சப்ப என்ன சொன்னீங்க..? ஸ்டாலின், ஈவிகேஎஸ் ஆஜராக திருச்சி நீதிமன்றம் உத்தரவு
திருச்சி: தமிழக அரசு தொடர்ந்துள்ள அவதூறு வழக்கில் திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக திருச்சி மாவட்டம் முக்கொம்பு கதவணை கடந்த ஆகஸ்டு மாதம் உடைந்தது. இதையடுத்து ஒரு சில நாட்களில் அணையை பார்வையிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி அங்கு புதிய கதவணை கட்டுவதற்கு உத்தரவிட்டார்.
அந்த தருணத்தில், செப்டம்பர் 3ம் தேதி முக்கொம்பு அணையை தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், பார்வையிட்டார். தமிழக அரசு சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் தான் அணை உடைந்தது என்று அவர் குற்றம்சாட்டினார்.
இந்த விவகாரத்தில் தமிழக அரசு மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறு கருத்து பரப்பியதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மீது திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அரசு வழக்கறிஞர் சம்பத்குமார் கடந்த அக்டோபர் 2ம் தேதி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு மீதான விசாரணை மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு முன்பு நடைபெற்றது. அப்போது புகார் மனுவில் முகாந்திரம் இருப்பதால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் வருகிற பிப்ரவரி 13ம்தேதி ஆஜராகுமாறு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நீதிபதி குமரகுரு உத்தரவிட்டார்.
இதே போல தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது. திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி பேட்டியளித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தமிழக அமைச்சர்கள், முதல்வர் ஆகியோர் கமிஷனுக்கு ஆசைப்பட்டு முக்கொம்பு அணையை உடைத்தார்களோ? என்ற சந்தேகம் உள்ளது என்று கூறியிருந்தார்.
அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் கருத்து கூறிய இளங்கோவன் மீது தமிழக அரசு சார்பில் திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் இளங்கோவன் வருகிற பிப்ரவரி 12-ந்தேதி ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.