செல்லும் இடமெல்லாம் தி.மு.க அலை.. ஒரு மாஸ் வெற்றி வெயிட்டிங்.. கே.என்.நேரு கான்ஃபிடன்ஸ்!
திருச்சி: அ.தி.மு.க ஆட்சி மீது மக்களிடம் வெறுப்பு நிலவுகிறது. திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் தி.மு.க வெல்வது உறுதியாகி விட்டது என்று தி.மு.க முதன்மை செயலாளர் கே.என்.நேரு தெரிவித்தார்.
தமிழகத்தில் தேர்தல் திருவிழா உச்சத்தை தொட்டு வருகிறது. ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் அனல் பறக்கும் வெயிலிலும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தி.மு.க அலை வீசுகிறது
இந்த நிலையில் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் தி.மு.க முதன்மைச்செயலாளரும், வேட்பாளருமான கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது; திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் தி.மு.க வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. தி.மு.க.வின் அலை காணும் இடம் எல்லாம் வீசுவதால் பெரும்பான்மையான வெற்றியுடன் தி.மு.க ஆட்சியில் அமருவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.கடந்த 10 ஆண்டுகளாக திருச்சியில் எவ்வித வளர்ச்சித் திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. எனவே, தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதில் வாக்காளர்கள் உறுதியாக உள்ளனர்.

அ.தி.மு.க செல்வாக்கு இழந்து விட்டது
மாநிலம் முழுக்க மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக அலை வீசுவதால் இந்த தேர்தலில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி கிடைக்கும். இப்போதுள்ள களச்சூழலைப் பார்த்தால், திருச்சி மாவட்டத்திலுள்ள 9 தொகுதிகளிலும் தி.மு.க வெற்றி பெறுவது நிச்சயம். மக்களிடம் செல்வாக்கு இழந்து விட்ட அ.தி.மு.க.வினர், வேறுவழியின்றி சில அதிகாரிகளின் துணையுடன் திட்டமிட்டு சதி செய்து எங்களைப் பற்றி தவறான தகவல்களை பரப்பவும், தேர்தலை நிறுத்தவும் முயற்சி செய்கின்றனர். ஆனால் எதுவும் எடுபடப்போவதில்லை.

தேர்தல் ஆணையம் நேர்மையாக நடக்கும்
தேர்தல் ஆணையம் நேர்மையாக நடந்து கொள்ளும் என நம்புகிறோம். காவல் நிலையங்களில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதற்கும், எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நான் போட்டியிடும் திருச்சி மேற்கு தொகுதி மட்டுமின்றி மாவட்டத்திலுள்ள 9 தொகுதிகளிலுள்ள மக்களிடமும் என் மீதான அன்பும், நம்பிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருவதை பிரச்சாரத்துக்கு செல்லுமிடங்களில் நேரடியாக உணர முடிகிறது. அ.தி.மு.க ஆட்சி மீது மக்களிடம் கடும் வெறுப்பு இருப்பதை செல்லும் இடங்களில் எல்லாம் காணமுடிகிறது.

சென்னைக்கு அடுத்த மாநகர்
திருச்சி மாநகர் மக்கள் எங்கள் மீது வைக்கும் நம்பிக்கையை நிச்சயமாக காப்பாற்றும் வகையில் ஆட்சி அமைந்தவுடன் தி.மு.க எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடுகள் இருக்கும்.தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன், திருச்சி மாநகரின் வளர்ச்சிக்காக ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், மக்கள் பயன்படுத்தும் வகையில் உய்யக்கொண்டான் வாய்க்கால் சீரமைப்பு, மிகப் பெரிய நூலகம், கோணக்கரை சாலை விரிவாக்கம், குடமுருட்டி - ஸ்ரீரங்கம் இடையே காவிரியில் புதிய பாலம், நீதிமன்றம் அருகிலிருந்து உய்யக்கொண்டான் கரையில் அல்லித்துறை வரை புதிய சாலை, நீர்மட்டத்தை உயர்த்த குளங்கள், ஏரிகள் சீரமைப்பு என எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்த தயாராக வைத்துள்ளோம். இதன் மூலம் சென்னைக்கு அடுத்த சிறந்த மாநகராக திருச்சியை மாற்றுவோம்.

எம்ஸ்க்கு நிகரான மருத்துவமனை
மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகள் விரிவுபடுத்தப்பட உள்ளன. துறையூர், முசிறியில் தண்ணீர் தட்டுப்பாட்டைத் தவிர்க்க கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டு வரப்படும். திருவெறும்பூர், மணப்பாறை, மண்ணச்சநல்லூர் பகுதிகளில் புதிய தொழிற்சாலைகள், சிப்காட் தொடங்கப்படும். லால்குடி, மணப்பாறையில் அரசு கலைக் கல்லூரி, புள்ளம்பாடியில் பாலிடெக்னிக் கல்லூரி அமைக்கப்படும். கிராமப்புற மக்களுக்கு எளிதில் மருத்துவ வசதி கிடைக்கும் வகையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அதிகரிக்கப்படும். திருச்சியில் எய்ம்ஸ்க்கு நிகரான அரசு மருத்துவமனை அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications