ஆளுநரை மாற்றாதீங்க! ஆர்என் ரவியே இருக்கட்டும்! ட்விஸ்ட் வைத்த ஸ்டாலின்! திருச்சியில் பரபர பேச்சு
திருச்சி: தமிழக ஆளுநருக்கும், அரசுக்கும் இடையே கடும் மோதல் போக்கு உள்ளது. ஆர்என் ரவியை மாற்ற வேண்டும் என திமுக ஜனாதிபதியிடம் புகார் அளித்தது. இந்நிலையில் தான் தமிழக ஆளுநரை மாற்றம் செய்ய வேண்டாம் என திடீரென முதல்வர் ஸ்டாலின் இன்று திருச்சியில் பரபரப்பாக பேசியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதி மற்றும் புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளில் வெற்றி பெறும் முனைப்பில் திமுக தேர்தல் பணியை தொடங்கி உள்ளது.

இந்நிலையில் தான் இன்று திருச்சியில் 15 மாவட்டங்களை சேர்ந்த திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறைக் கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
நமக்கு எதிராக அவதூறு மற்றும் பொய் செய்திகளை பரப்பிட ஒரு கூட்டம் சுற்றி கொண்டு இருக்கிறது. பொய்களுக்கு ஆயுள் மிகக்குறைவு. அவர்கள் பொய்களை மட்டுமே சொல்லி கொண்டிருக்கட்டும். நாம் திரும்ப திரும்ப அரசின் திட்டங்களை பற்றி பேசி கொண்டிருக்கலாம். நம்முடைய அரசின் நலத்திட்டங்கள் பற்றி வாக்காளர்களிடம் எடுத்து கூறுங்கள். இதன்மூலம் எதிரிகள் பரப்பும் அவதூறு எல்லாம் சுக்கு நூறாக நொறுங்கிப்போகும்.
இன்றைய சமூக ஊடகங்கள் தான் சிறப்பான பரப்புரை களமாக மாறியுள்ளது. வீட்டில் பக்கத்து அறையில் இருந்தே வாட்ஸ்அப்பில் மெசேஜ் செய்து வருகின்றனர். நாம் அனுப்பும் ஒரு செய்தி ஒரே நிமிடத்தில் உலகத்துக்கே பரவும் வசதி உள்ளது. இதனால் அனைவரும் சமூக வலைதளங்களில் கணக்குகளை தொடங்க வேண்டும். அந்த கணக்குகளில் இருந்து அவதூறுகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.
தேவையில்லாத வம்பு, வாக்குவாதங்கள் எதுவும் செய்யாதீர்கள். ஏனென்றால் அதனை திசை திருப்பி விடுவார்கள். தெரிந்தோ, தெரியாமலோ ஆளுநர் நமக்கு பிரசாரம் செய்து வருகிறார். அவரை மாற்ற வேண்டும் என்று நான் சொல்லவில்லை. அவரே இருக்கட்டும். ஏனென்றால் தேர்தலில் நமக்கு வாக்கு அதிகரிக்கும். அதேபோல் தேவையற்ற பிரச்சனைகளை கிளப்பி யாரும் கெட்டப்பெயரை வாங்கி கொடுக்க கூடாது'' என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications