திருச்சியில் எடப்பாடி! ஒரத்தநாடு அதிமுகவினர் ஸ்பெஷல் கெஸ்ட்கள்! டபுள் வரவேற்பு தந்த அதிமுக மா.செ.!
திருச்சி: திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் எம்.ஜி.ஆர். சிலையை திறந்து வைத்த அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி, அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டு பேசினார்.
முன்னதாக எடப்பாடி பழனிசாமி வருவதற்கு முன்பாக கூட்டம் கலைந்துவிடக் கூடாது என்பதற்காக ஒரு பக்கம் ஆர்கெஸ்ட்ரா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மட்டுமின்றி எடப்பாடி பழனிசாமியை புகழ்ந்தும் பாடல்கள் பாடப்பட்டன.

இதனிடையே பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்த திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் குமார், அதிமுகவினரை மேடையில் நின்று மைக்கில் வரவேற்றதுடன் போக்குவரத்து காவலராகவே மாறி சாலையில் நின்ற கட்சிக்காரர்களின் வாகனங்களை மைக்கில் அறிவித்து அப்புறப்படுத்தச் சொல்லிக் கொண்டிருந்தார்.
அப்போது ஒரத்தநாட்டிலிருந்து வந்துள்ள அதிமுகவினரை வருக வருக வருக வருக என வரவேற்பதாக 4 முறை முறை கூறினார். இதை பக்கத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்த மனோகரனும், என்.ஆர்.சிவபதியும் சிரித்தனர். அவர்களுக்கு ஓபன் மைக்கிலேயே அதற்கான விளக்கத்தை கொடுத்தார் அதிமுக மாவட்டச் செயலாளர் குமார்.
அதாவது ஒரத்தநாட்டிலிருந்து வந்திருப்பவர்கள் நமக்கு சிறப்பு விருந்தினர்கள் எனக் கூறினார். அதாவது வைத்திலிங்கத்தின் சொந்த ஊரிலிருந்தும் ஆட்கள் வந்திருக்கிறார்கள் என்பதை எல்லோருக்கும் தெரியப்படுத்தவே அவர் இவ்வாறு வரவேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் தங்களுக்குள் கூடிக் கூடி சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர்.
அதுவென்ன என்று விசாரித்தால், ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்தரநாத் வகிக்கும் எம்.பி. பதவி செல்லாது என்ற தீர்ப்பை பற்றித்தானாம். ஏற்கனவே ரவீந்தரநாத்தை அதிமுக எம்.பி.யாக கருதக்கூடாது என அதிமுக தரப்பில் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications