பெண் காவலர்கள் மீது அவதூறு! கைதான ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு திருச்சி கோர்ட் நிபந்தனை ஜாமீன்!
திருச்சி: யூடியூபர் சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பிய ரெட்பிக்ஸ் யூடியூப் சேனலின் நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்டு, திருச்சி மத்தியச் சிறையில் இருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். கடந்த மே 10 ஆம் தேதி கைதான இவர் கிட்டத்தட்ட 70 நாட்களுக்கு மேலாக சிறையில் இருந்துள்ளார்.
பெண் காவலர்களின் கண்ணியத்தை சீர்குலைக்கும் வகையில் சவுக்கு சங்கர் கொடுத்த பேட்டியை யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஒளிபரப்பு செய்தார். இதையடுத்து கடந்த மே மாதம் 10ஆம் தேதி இரவு டெல்லியில் யூடியூபர் ஃபெலிக்ஸை திருச்சி தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

பிறகு திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். ஃபெலிக்ஸ் ஜெரால்டு மீது கோவை போலீஸாரும் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் இவருக்கு கடந்த மே 22 ஆம் தேதி ஜாமீன் வழங்கப்பட்டது.
அதே சமயம் கோவை நீதிமன்றத்தில் இவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு ஃபெலிக்ஸ் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தியது. இதையடுத்து கோவை டவுன்ஹால் காவல் நிலையத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை கையெழுத்திட வேண்டும் என நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கியது.
கோவை, திருச்சி ஆகிய வழக்குகளில் ஜாமீன் கிடைத்ததை அடுத்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஃபெலிக்ஸ் ஜெரால்டு இன்று காலை ஜாமீனில் விடுதலையானார்.
யூடியூபர் ஃபெலிக்ஸ் கைது செய்யப்பட்டதும் மே 27 ஆம் தேதி நுங்கம்பாக்கத்தில் உள்ள பெலிக்ஸின் வீட்டில் போலீஸார் சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் ஐடி கார்டை காட்டுமாறும், ஷூக்களை கழற்றிவிட்டு வருமாறும் ஜெரால்டின் மனைவி அவர்களுடன் வாக்குவாதம் செய்தார். மேலும் கதவை திறப்பதற்கு அத்தனை முறை தட்டினார்கள் என்றெல்லாம் புகார் அளித்திருந்தார்.












Click it and Unblock the Notifications