திருச்சி அருகே அரசுப் பள்ளி மாணவர் கொலை.. தலைமையாசிரியர் உள்பட 3 பேர் பணியிடைநீக்கம்
திருச்சி அருகே அரசுப் பள்ளியில் சக மாணவா்கள் தாக்கியதில் 10-ஆம் வகுப்பு மாணவா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக பள்ளித் தலைமையாசிரியா் உள்பட 3 ஆசிரியா்கள் பணியிடை நீக்கம்
திருச்சி: திருச்சி அருகே அரசுப் பள்ளியில் சக மாணவா்கள் தாக்கியதில் 10-ஆம் வகுப்பு மாணவா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக பள்ளித் தலைமையாசிரியா் உள்பட 3 ஆசிரியா்கள் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகேயுள்ள பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற 10-ஆம் வகுப்பு மாணவா் மெளலீஸ்வரன், சக மாணவா்களால் தாக்கப்பட்டு வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இது தொடா்பாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உத்தரவின் பேரில், துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டது. இதில், பணியின்போது கவனக் குறைவாக இருந்ததாக பள்ளியின் தலைமையாசிரியா் ஈஸ்வரி, வகுப்பாசிரியா் ராஜேந்திரன், கணித ஆசிரியா் வனிதா ஆகிய 3 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுவதாக முதன்மைக் கல்வி அலுவலா் ர. பாலமுரளி தெரிவித்துள்ளாா்.
மேலும், 3 ஆசிரியா்கள் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இந்நிலையில் மாணவன் மவுலீஸ்வரனை அடித்துக் கொலை செய்த வழக்கில், சக மாணவர்கள் 3 பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். பின்னர், 3 பேரும் சிறுவர்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சியில் உள்ள கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுதொடா்பாக, அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள பாலசமுத்திரம் அரசுப் பள்ளி மாணவா் மெளலீஸ்வரன் உயிரிழந்த சம்பவம் அறிந்து மிகுந்த மனவருத்தமும், வேதனையும் அடைந்தேன். மகனை இழந்து வாடும் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இச்சம்பத்தில் தொடா்புடைய பள்ளித் தலைமை ஆசிரியா் உள்பட 3 போ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற சம்பவங்கள் எதிா்காலத்தில் பள்ளிகளில் நிகழாத வண்ணம், மாணவா்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன் என அமைச்சா் தெரிவித்துள்ளாா்.












Click it and Unblock the Notifications