திருச்சி அருகே பயங்கரம்.. அதிகாலையில் லாரி மீது கார் மோதி கொடூர விபத்து! சம்பவ இடத்திலேயே 6 பேர் பலி
திருவாசியில் லாரி மீது ஆம்னி கார் மோதி கொடூர விபத்து ஏற்பட்டுள்ளது.
திருச்சி: திருச்சி அடுத்துள்ள திருவாசியில் லோடு லாரி மீது ஆம்னி கார் மோதியதில் கடுமையான விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிறுமி உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிபாதமாபக உயிரிழந்தனர்.
பொதுவாக அதிகாலை நேரத்தில் வாகனம் ஓட்டுபவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்துவார்கள். அதிகாலை நேரத்தில் வெளிச்சம் போதியளவில் இருக்காது என்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இதன் காரணமாக அதிகாலை நேரத்தில் விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அப்படித்தான் திருச்சி அடுத்துள்ள திருவாசி என்ற இடத்தில் லாரியும் ஆம்னி காரும் மோதிக் கொண்டதில் மோசமான விபத்து ஏற்பட்டுள்ளது.

திருச்சி விபத்து
திருச்சி அடுத்துள்ள திருவாசி அருகே அதிகாலையில் விபத்து ஏற்பட்டுள்ளது. சேலம் தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது ஆம்னி கார் மோதி இன்று அதிகாலையில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் கும்பகோணம் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்த ஒரு குழந்தை உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் சிலர் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

எப்படி நடந்தது
சேலம் எடப்பாடி மாவட்டத்தில் இருந்து 9 பேர் ஆம்னி கார் மூலம் கும்பகோணத்தில் உள்ள கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தனர். அதேபோல திருச்சியில் இருந்து வந்த லாரி கரூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அந்த ஆம்னி கார் திருவாசி என்ற இடத்திற்கு அருகே வந்த போது எதிர்பாராத விதமாக அது லாரி மீது மோதியதில் இந்த மோசமான விபத்து ஏற்பட்டுள்ளது.

6 பேர் பலி
அதிகாலை சுமார் 3.40 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. லாரியும் ஆம்னி காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட இந்த விபத்தில் ஒரு குழந்தை, ஒரு பெண் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், காயமடைந்தோரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்திற்கான காரணம் தெரியவில்லை.

போலீசார் விசாரணை
இந்த விபத்து காரணமாகத் திருச்சி - சேலம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் நெடுஞ்சாலையில் போக்குவரத்தைச் சீர் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்தை திருச்சி மாவட்ட எஸ்பி சுஜித்குமார் நேரில் ஆய்வு செய்தார். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications