உதயநிதியின் தலைக்கு ரூ.50 கோடி.. யாசகம் பெற்றாவது தருவாராம்! வசமாய் சிக்கிய இந்து முன்னணி நிர்வாகி
திருச்சி: சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துக்கள் தேசிய அளவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. இப்படி இருக்கையில், உதயநிதியின் தலைக்கு ரூ.50 கோடி விலை நிர்ணயித்த இந்து முன்னணி திருச்சி மாவட்ட செயலாளர் தண்டபாணியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சமீபத்தில் சென்னை காமராஜர் அரங்கத்தில் சனாதன எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பொன்முடி, தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், விசிக தலைவர் திருமாவளவன் எம்பி, சிபிஐ மற்றும் சிபிஎம் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர். இதில் சிறப்புரையாற்றிய உதயநிதி ஸ்டாலின்,

"சனாதனம் என்கிற பெயரே சமஸ்கிருதத்திலிருந்து வந்தது. நிலையானதாகவும், மாற்ற முடியாததாகவும் இருப்பதன் அர்த்தமே சனாதனம். ஆனால், எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எதுவுமே நிலையானது கிடையாது, அனைத்தையும் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்கு உருவான இயக்கம்தான் கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட முன்னேற்ற கழகமும். சனாதனம் என்பது மலேரியா, டெங்கு போன்றது. அதை எதிர்ப்பது அல்ல, ஒழிக்க வேண்டும் என்பதே நமது நோக்கம்" என்று பேசியிருந்தார்.
இவரது பேச்சுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்பட பாஜகவின் அனைத்து தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதேபோல உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த சாமியார் ஒருவர், உதயநிதியின் தலைக்கு ரூ.10 கோடி விலை நிர்ணயித்துள்ளார். மற்றொருபுறம், இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கும், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இப்படி இருக்கையில், தமிழ்நாட்டில் இந்து அமைப்புகள் சில உதயநிதியின் பேச்சுக்கு தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றன. குறிப்பாக திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் கடந்த 19ம் தேதி நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்று பேசிய இந்து முன்னணியின் மாவட்ட செயலாளர் தண்டபாணி, "சனாதனம் பற்றி பேசிய அமைச்சர் உதயநிதியின் தலையை கொண்டு வந்தால், பிச்சை எடுத்தாவது, ரூ.50 கோடி தருகிறேன்" என்று கூறியிருந்தார்.
இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் நேற்று இரவு தண்டபாணியை காவல்துறையினர் வீடு புகுந்து கைது செய்துள்ளனர். அதேபோல முசிறியில் கடந்த 24ம் தேதி நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வல நிகழ்ச்சியில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர்பாபு உள்ளிட்டோரை தரக்குறைவாக பேசியதாக இந்து முன்னணியின் நிர்வாகி தங்கபாண்டியனையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இது தவிர திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கடந்த 22ம் தேதி நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திலும், செய்யாறில் நடந்த ஊர்வலத்திலும் தமிழக அரசையும், அமைச்சர்களையும் தரக்குறைவாக பேசியதாக இந்து முன்னணியை சேர்ந்த நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications