கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால்... 1 கிலோ தக்காளி இலவசம்... திருச்சியில் புதுமையான முயற்சி..!
திருச்சி: கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் 1 கிலோ தக்காளி இலவசம் என்ற அறிவிப்பு திருச்சி மாவட்டம் புங்கனூர் பஞ்சாயத்தில் நடைமுறையில் உள்ளது.
பொதுமக்களை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு சுகாதாரத்துறையினர் தொடர்ந்து அறிவுறுத்தி வரும் நிலையில், இன்னும் கிராமப்புறங்களில் அது தொடர்பான போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை.

இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியத்திற்குட்பட்ட புங்கனூர் பஞ்சாயத்தில், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு ஒரு கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை நூதன முறையில் மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் இலவச தக்காளி வழங்கப்படுவதாக காரணம் கூறப்படுகிறது.
ஊராட்சி மன்றத் தலைவர் தாமோதரன் ஏற்பாட்டில் இந்த புதுமையான முயற்சி முன்னெடுக்கப்படுகிறது. கேட்பதற்கும், பார்ப்பதற்கும் விந்தையாக தெரிந்தாலும் கிராம மக்கள் மத்தியில் இலவச தக்காளிக்கு ஓரளவு வரவேற்பு உள்ளதை காண முடிகிறது.
இதனிடையே தடுப்பூசி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு சேர்த்து, முகக்கவசம் அணிவதன் அவசியம் மற்றும் சமூக இடைவெளி குறித்தும் சுகாதாரத்துறை விழிப்புணர்வு விளம்பரங்களை வெளியிட வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.












Click it and Unblock the Notifications