ஷாக்! திருச்சியில் மது குடித்த இருவர் அடுத்தடுத்து மர்மமான முறையில் மரணம்! என்ன காரணம்.. பரபர தகவல்
திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடி அருகே டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்த இரண்டு பேர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் அரசின் டாஸ்மாக் நிறுவனம் மூலமே மது விற்பனை நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் டாஸ்மாக்கில் மது விற்பனை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. முந்தைய ஆண்டை காட்டிலும் மது விற்பனை தொடர்ந்து உயர்ந்தே வருகிறது.

அதேநேரம் தமிழ்நாட்டில் இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகி வருவதாகவும் இதனால் முழு மது விலக்கைக் கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இப்போது மதியம் 12 மணி வரை இரவு 10 மணி வரை மது விற்பனை நடந்து வருகிறுத. மது விற்பனை நேரத்தை படிப்படியாகக் குறைக்கவும் டாஸ்மாக் கடைகளைக் குறைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கிடையே திருச்சி அருகே டாஸ்மாக் கடையில் மது குடித்த சிலர் மர்மமான முறையில் உயிரிழந்த ஷாக் சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
திருச்சி லால்குடி அடுத்துள்ள தச்சங்குறிச்சி மாரியம்மன் கோயில் கிழக்கு தெரு பகுதியில் வசித்து வந்தவர் முனியாண்டி. 60 வயதான இவர் வார்டு உறுப்பினராக இருந்தார். மேலும், கொத்தனார் வேலையும் செய்து வந்தார். அவருக்கு மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். அதே பகுதியில் வசிக்கும் 48 வயதான கூலித் தொழிலாளி சிவக்குமார். எப்போதும் இருவரும் சேர்ந்தே மது அருந்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
அதன்படி நேற்று முன்தினம் அங்கே தச்சங்குறிச்சியில் இயங்கும் டாஸ்மாக் கடையில் மது வாங்கி இருவரும் குடித்துள்ளனர். மது குடித்த சில மணி நேரத்தில் மாலை நேரத்தில் முனியாண்டிக்கு திடீரென வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் உடனடியாக தச்சன்குறிச்சி அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் மேலும் சிகிச்சைக்கு லால்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கே அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். இருப்பினும், வயிற்றுப் போக்கு தொடர்ந்துள்ளது, உடல்நிலையும் மோசமாக ஆரம்பித்துள்ளது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக நேற்றைய தினம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர். இருப்பினும், அதற்குள் அவரது உடல்நிலை மோசமாகவே ஆம்புலன்ஸில் திருச்சி அரசு மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே முனியாண்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
முனியாண்டியுடன் மது குடித்த சிவகுமாரும் குடிபோதையில் உணவு எதையும் சாப்பிடாமலேயே வீட்டில் படுத்துத் தூங்கியுள்ளார். அதன் பின்னரும் மீண்டும் உணவு எதையும் சாப்பிடாமலேயே மது குடித்துள்ளார். இரவு உணவையும் சாப்பிடாமல் அவர் அப்படியே தூங்கியதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே அவரது வீட்டில் உள்ளவர்கள் காலை அவரை எழுப்ப முயன்ற போது, அவர் உயிரிழந்தது தெரியவந்தது.
இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவர்களின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே உணவு அருந்தாமல் அதிகளவில் மது குடித்தது உயிரிழந்ததாக முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்த இருவர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications