அதிகாரிகள் மெத்தனம்! ஆவேசமடைந்த ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.! திருச்சியில் நடுரோட்டில் அமர்ந்து தர்ணா!
திருச்சி: திருச்சியில் மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சியமான போக்கை கண்டித்து ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஒருவரே சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாலைப்பணிகள் தொடர்பாக திருச்சி மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வான இனிகோ இருதயராஜ் எடுத்துக் கூறியும் அதனை அவர்கள் காதில் வாங்கிக் கொண்டதாக தெரியவில்லை.
இந்நிலையில் பொறுத்து பொறுத்துப் பார்த்து விரக்தியடைந்த இனிகோ இருதயராஜ் நேற்றிரவு திடீரென சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
”என்னை கைது செய்ய போறாங்க..” போன மாசமே ட்விட்டரில் பதிவிட்ட திருச்சி சிவா மகன்- உதவுவாரா அண்ணாமலை?
பிரதானப் பகுதி
திருச்சியின் மிகப் பிரதான பகுதியான மேல புலிவார்டு சாலையில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக சாலைகள் பறிக்கப்பட்டு குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் காலை மாலை வேளைகளில் மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதுமட்டுமல்ல அந்தப் பகுதியே புகையும் புழுதியுமாக இருப்பதால் அந்த சாலையை கடப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. இத்தனைக்கும் திருச்சி கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகமும் அங்கு தான் உள்ளது.
அலட்சிய அதிகாரிகள்
ஒரு மாதத்திற்கும் மேலாக சாலையை பறித்து ஆங்காங்கு மண் மேடுகளை உருவாக்கிவிட்டு நமக்கென்னணு அலட்சியமாக இருந்த திருச்சி மாநகராட்சி அதிகாரிகளிடம் கிளி பிள்ளைக்கு சொல்வது போல் திரும்பத் திரும்ப மென்மையான முறையில் இனிகோ இருதயராஜ் சொல்லிப் பார்த்திருக்கிறார். இதோ முடிச்சிடலாம் சார், இந்த வாரம் முடிஞ்சிரும் சார் என்று கூறியே இனிகோ இருதயராஜை ஆஃப் செய்து வந்திருக்கின்றனர் மாநகராட்சி அதிகாரிகள்.
தர்ணா போராட்டம்
ஒரு கட்டத்தில் மாநகராட்சி அதிகாரிகள் தனது காதில் பூ சுற்றுகிறார்கள் என்பதை அறிந்துக்கொண்ட இனிகோ இருதயராஜ், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டிய பணிகளை ஜவ்வுமிட்டாயை போல் இழுத்தடித்த அதிகாரிகள் இதனால் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இனிகோ இருதயராஜை சந்தித்து ஓரிரு நாட்களில் பணியை முடித்துக்கொடுக்கிறோம் என உறுதியளித்தனர். இதையடுத்து அங்கு சென்ற காவல்துறையினரும் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
மக்கள் பாராட்டு
முதலமைச்சர் ஸ்டாலின் என்ன தான் வேகமாக ஓடி ஆட்சிக்கு மக்கள் மத்தியில் நற்பெயர் கிடைக்க உழைத்தாலும் ஒரு சில சோம்பேறி அதிகாரிகளால் மக்கள் மத்தியில் அரசு மீதான பார்வையும் மதிப்பும் மாறுகிறது. ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருப்பினும் கூட மக்கள் நலனுக்காக அதிகாரிகளை எதிர்த்து போராட துணிந்த இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ.வுக்கு திருச்சி மக்கள் பாராட்டுத் தெரிவிக்கின்றனர்.