கடுமையான வெயில் அடிக்குது! கொஞ்சம் பொறுத்துகங்க! சலசலப்பை கட்டுப்படுத்திய எடப்பாடி பழனிசாமி!
திருச்சி: சொத்து வரி உயர்வை கண்டித்து திருச்சியில் நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார்.
மண்டையை பிளக்கும் அளவுக்கு சுட்டெரித்த வெயிலால் கூட்டத்தில் கலந்துகொண்ட தொண்டர்களிடையே ஒரு கட்டத்தில் லேசான சலசலப்பு ஏற்பட்டதை, தனது சாதுர்யமான பேச்சால் கட்டுக்குள் கொண்டு வந்தார் அவர்.
''கடுமையான வெயில் அடிக்குது, கொஞ்சம் பொறுத்துகங்க, வேறு வழியில்லை, இதைவிட கடுமையான பாதிப்புகளை அரசு கொடுத்து வருகிறது'' எனக் கூறி தனது பேச்சைத் தொடர்ந்தார் எடப்பாடி பழனிசாமி.

அதிமுக ஆர்ப்பாட்டம்
சொத்து வரி உயர்வை கண்டித்து திருச்சியில் நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்டத்தில் காலை 11 மணிக்கு மேடையேறினார் எடப்பாடி பழனிசாமி. திருச்சி ரயில் நிலையம் பின்புறம் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்காக காலை 8.30 மணி முதலே தொண்டர்கள் குவிக்கப்பட்டு வந்தனர். ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட நிர்வாகிகளையும், தொண்டர்களையும் திரட்டிய அதிமுக மாவட்டச் செயலாளர்கள் அவர்களுக்கு தண்ணீர் பாட்டில் சிற்றூண்டி உள்ளிட்டவைகளை கொடுத்தனர்.

சுட்டெரித்த வெயில்
நேரம் செல்லச் செல்ல வெயில் மண்டையை பிளக்கத் தொடங்கியதால் ஆர்ப்பாட்ட மேடைக்கு கீழே நின்ற தொண்டர்கள் கூட்டத்தில் லேசான சலசலப்பு ஏற்படத் தொடங்கியது. இதையறிந்த எடப்பாடி பழனிசாமி சட்டென தனது பேச்சை நிறுத்தி, ''கடுமையான வெயில் அடிக்குது, கொஞ்சம் பொறுத்துகங்க, வேறு வழியில்லை, இதைவிட கடுமையான பாதிப்புகளை அரசு கொடுத்து வருகிறது''எனத் தெரிவித்தார். இதையடுத்து மீண்டும் தனது பேச்சை அவர் தொடர்ந்தார்.

தொப்பி மிஸ்ஸிங்
ஜெயலலிதா காலத்தில் இது போன்ற ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பகல் நேர பிரச்சாரக் கூட்டங்களின் போது வெயிலுக்காக அதிமுக தொண்டர்களுக்கு கேப் கொடுப்பது வழக்கமாக இருக்கும். ஆனால் இன்றைய ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் கேப் கொடுத்தது போல் தெரியவில்லை. இதனிடையே இலக்கணத் தமிழில் உரை நிகழ்த்தாமல் பேச்சு மொழியிலேயே நடப்பு விவகாரங்கள் குறித்தும் திமுக அரசு பற்றியும் எடப்பாடி பழனிசாமி பேசியது கூட்டத்தில் இருந்தவர்களை ஓரளவு கவனிக்க வைத்தது.

எல்லோரும் ஆஜர்
திருச்சியில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் மாஜி அமைச்சர்கள் அனைவரும் ஒருவர் விடாமல் ஆஜராகியிருந்தனர். அதேபோல் திருச்சி மாவட்டத்தில் உள்ள அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், எம்.பி.க்கள், மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் என எல்லோரும் கலந்துகொண்டு எடப்பாடி பழனிசாமிக்கு வணக்கம் வைத்து தங்கள் வருகையை உறுதிப்படுத்தி பதிவு செய்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications