"சொந்த மாமியாரை தோற்கடிக்க சதி வேலை செய்கிறார் ஆதவ் அர்ஜுனா".. ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் குற்றச்சாட்டு
திருச்சி: சொந்த மாமியாரை தோற்கடிப்பதற்காக சதி வேலை செய்து வருகிறார் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா என அவரது மைத்துனரும், லஜக தலைவருமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், லால்குடி தொகுதி தவெக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் தங்கள் கட்சியினரை சரியாக வழிநடத்த வேண்டும் என்றும் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் திமுக சார்பில் பாரிவள்ளல் வேட்பாளராக களம் காண்கிறார். அதிமுக வேட்பாளராக போட்டியிடுகிறவர் லீமா ரோஸ். லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி. தவெக சார்பில் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் போடியிடுகிறார். நாதக சார்பில் மதன் போட்டியிடுகிறார்.

லீமா ரோஸ் மார்ட்டின் தமிழ்நாட்டிலேயே அதிக சொத்துகளை வைத்திருக்கக் கூடிய பணக்கார வேட்பாளர். இவரது மகன், புதுச்சேரியில் லட்சிய ஜனநாயகக் கட்சி தலைவர். இவரது மருமகன் தவெக பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா. இதனால் லால்குடி தொகுதி கவனம் பெற்றிருக்க கூடிய தொகுதியாக உள்ளது.
இந்நிலையில் லட்சிய ஜனநாயக கட்சி தலைவரும், லால்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் மனைவியுமான லீமா ரோஸ் மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்டின் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பேசுகையில், "புதுச்சேரியில் இருந்து சில இளைஞர்கள் சமயபுரம் கோயிலுக்கு சென்று விட்டு என்னை சந்திப்பதற்காக லால்குடிக்கு வந்துள்ளனர். அப்போது தவெக தற்குறி கூட்டங்கள் கேட்டுள்ளனர். அப்போது தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளருக்கும் கு.ப .கிருஷ்ணன் பிரச்சார வாகனத்தில் இருந்து இறங்கி அந்த வாலிபரிடம் வெளியூரில் இருந்து எதற்காக வந்தீர்கள் என்று சொல்லி கட்சியினரிடம் வெட்டுங்கடா எனக் கூறியுள்ளார்.
அவர்கள் இளைஞர்களை அடித்ததால் அவர்களுக்கு காயம் ஏற்பட்டு தற்போது 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நான் அவர்களை சென்று பார்த்து வந்து இது குறித்து காவல்துறையிலும், ஐஜி அலுவலகத்திலும் புகார் செய்துள்ளேன். புகார் பெற்ற காவல்துறை ஆய்வாளரும், துணை ஆய்வாளரும் தற்போது விடுமுறையில் சென்றதாக கூறுகிறார்கள்.
கு.ப.கிருஷ்ணனுக்கு ஆதரவாக அவர்கள் செயல்பட்டதாகத் தெரிகிறது. முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தனது அனுபவத்திற்கு இந்த தற்குறி கூட்டங்களை அவர் ஒழுங்காக வழி நடத்த வேண்டும். இன்று அவர்களை ஒரு குற்றவாளியாக மாற்றி உள்ளார். சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம்.
என்னுடைய மச்சான் ஆதவ் அர்ஜுனா மீது எங்களுக்கு சந்தேகம் உள்ளது. எங்களுடைய அம்மாவை, அவரது சொந்த மாமியாரை தோற்கடிப்பதற்கான சதி வேலை செய்து வருகிறார் ஆதவ் அர்ஜுனா. அவர் தோற்கப் போகிறார். லால்குடி தொகுதியில் வீட்டிற்கு 25ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக தனியார் தொலைக்காட்சியில் தவறான செய்தி வருகிறது." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications