கருணாநிதிக்கு இரங்கற்பா எழுதியதால் டிரான்ஸ்பர்.. பணியையே துறந்த பெண் காவலர் செல்வராணி
Recommended Video
திருச்சி: கருணாநிதிக்கு இரங்கற்பா எழுதியதால் இடமாற்றம் செய்யப்பட்ட காவலர் செல்வராணி, விருப்பு ஓய்வு மூலம் தனது வேலையையே துறந்தார்.
கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி காலமானார். அவரது இலக்கியத்தின் மீது பற்று கொள்ளாதவர்களே இல்லை. அந்த வகையில் திருச்சியைச் சேர்ந்தவர் செல்வராணி ராமச்சந்திரன். அவர் திருச்சியில் காவலராக பணியாற்றி வருகிறார்.
இவர் ஒரு கவிஞர். திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கோவை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடக்கும் கவியரங்கம், பட்டிமன்றங்களிலும் பங்கேற்று வருகிறார்.
பணியிடமாற்றம்
இவர் கருணாநிதிக்கு இரங்கற்பா எழுதியுள்ளார். இந்த கவிபாவின் வீடியோ சுமார் 5.44 நிமிடங்கள் ஆகும். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த நிலையில் செல்வராணி திருச்சி நுண்ணறிவுப்பிரிவில் இருந்து மத்திய மண்டல காவல் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
விருப்பம் இல்லை
இதுகுறித்து செல்வராணி கூறுகையில் கருணாநிதிக்கு இரங்கற்பா வாசித்த காரணத்துக்காக என்னை பணியிட மாற்றம் செய்ததை ஏற்றுக் கொள்ள முடியாது. அதுபோல் என்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தியது தவறு என்று சொல்லும் நிர்வாகத்திற்கு கீழ் தனக்கு பணிபுரிய விருப்பம் இல்லை.
கவிதை வாசித்தேன்
இரங்கற்பா பாடியது குறித்து விளக்கம் கேட்டு அதை நான் அனுப்புவதற்குள் என்னை எப்படி பணியிட மாற்றம் செய்யலாம். இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை. இதுபோன்ற ஜெயலலிதா காலமான போதும் கவிதை வாசித்தேனே அப்போது ஏன் இந்த நடவடிக்கை எடுக்கவில்லை.
செல்வராணிக்கு கடிதம்
எனவே விருப்ப ஓய்வு பெறுகிறேன் என கடிதம் எழுதியிருந்தார். இதைத் தொடர்ந்து பணிக்கு செல்ல விருப்பம் இல்லாமல் 3 மாத தொடர் மருத்துவ விடுப்பில் இருந்தார். இதையடுத்து செல்வராணியின் விருப்ப ஓய்வை ஏற்றுக் கொள்வதாக மாநகர ஆணையர் அலுவலகத்தில் இருந்து செல்வராணிக்கு கடிதம் வந்தது. இதையடுத்து செல்வராணி விருப்ப ஓய்வு பெற்றார்.