வெயிலை கூட பார்க்காமல்.. லட்ச லட்சமாக குவிந்த திமுக தொண்டர் படை.. திருச்சியை தெறிக்கவிடும் ஸ்டாலின்!
திருச்சி: திருச்சி அருகே சிறுகனூரில் திமுக சார்பில் நடக்கும் மாநாட்டில் பல லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர். திமுக தொண்டர்கள், பொதுமக்கள் என்று திரளானோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
'விடியலுக்கான முழக்கம்' என்ற தலைப்பில் திருச்சியில் இன்று திமுக கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு மிகப்பெரிய பொதுக்கூட்டமாக இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்கா திட்டத்தோடு, முறையான ஏற்பாடுகளோடு இந்த மாநாடு தொடங்கி உள்ளது.
Recommended Video
திமுக தலைவர் ஸ்டாலின் இந்த பொதுக்கூட்டத்தை தொடங்கி வைத்தார். 10 ஆண்டு இலட்சிய பிரகடனம் என்ற தலைப்பில் திமுக தலைவர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை இன்று இந்த பொதுக்கூட்டத்தில் வெளியிட உள்ளார். இந்த பொதுக்கூட்டத்தில் திமுக சார்பாக மிகப்பெரிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்பாடுகள்
இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் மிகவும் பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ளது. திமுகவில் இதுவரை மேற்கொள்ளாத வகையில் மிகப்பெரிய அளவில் வடிவமைக்கப்பட்ட மேடை, மக்கள் வந்து செல்ல வசதி, திமுக தலைவர்கள் உட்கார வசதி, ரெட் கார்பெட், வித்தியாசமான மேடை அமைப்பு, 230+ எல்இடி திரைகள் என்று நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு பிராம்மாண்டமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எல்லை
மேடை அருகே மட்டுமின்றி திருச்சி முழுக்க இதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. திருச்சி எல்லையை சுற்றி கிட்டத்தட்ட 50 கிமீ தூரத்திற்கு சாலை நெடுகிலும் திமுக கொடி வைக்கப்பட்டுள்ளது. இது போக பல இடங்களில் பிரம்மாண்ட கட் அவுட்கள், பெயிண்ட் செய்து வடிவமைக்கப்பட்ட திராவிட தலைவர்களின் படங்கள் வைக்கப்பட்டு திருச்சியே திருவிழா கோலம் பூண்டுள்ளது.
பிரம்மாண்டம்
திருச்சி அருகே சிறுகனூரில் திமுக சார்பில் நடக்கும் இந்த கூட்டத்திற்கு 700 ஏக்கரில் பெரிய பந்தல், மேடை அமைப்புகள் செய்யப்பட்டு, கூட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்டா மட்டுமின்றி பல்வேறு மாவட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொது மக்கள் வந்து இருக்கிறார்கள். மொத்தம் 5 லட்சம் பேர் உட்காரும் வகையில் இங்கு இருக்கைகள் போடப்பட்டுள்ளது.
எத்தனை பேர்
ஆனால் கூட்டத்திற்கு இன்று மாலைக்குள் 10 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 6-7 லட்சம் பேர் வந்திருக்கலாம் என்கிறார்கள். வெயிலை கூட பார்க்காமல் பல லட்சம் பேர் விழா நடக்கும் அரங்கில் குவிந்து உள்ளனர். இந்த விழா மேடைக்கு ஸ்டாலின் வரும் போது அவரின் வேன் கூட்டத்தில் மிதந்தபடிதான் வந்தது. திமுக நினைத்ததை விட அதிக கூட்டம் வந்துள்ளது.
மேடைகள்
இதில் மொத்தம் மூன்று விதமான மேடைகள் இந்த விழாவிற்காக அமைக்கப்பட்டுள்ளது. எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் அமர்வதற்கு ஏற்றபடி மூன்று மேடைகள் பிரித்து அமைக்கப்பட்டுள்ளது. கிராமசபை கூட்டங்கள், சிறுசிறு பிரச்சாரங்கள் மூலம் மாவட்டம், வட்டம் என்று மக்களை சந்தித்து வந்த ஸ்டாலின் தற்போது பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார்.
வலிமை
திமுகவின் வலிமையை காட்டும் அளவிற்கு எதிர்பார்க்க முடியாத கூட்டத்தை கூட்டி, விழாவை ஏற்பாடு செய்துள்ளார். தேர்தலை முன்னிட்டு இந்தக்கூட்டம் கண்டிப்பாக மிகப்பெரிய மாற்றத்தை திமுகவினர் மத்தியில் ஏற்படுத்தும். 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுகவினருக்கு இந்த கூட்டம் பெரிய அளவில் நம்பிக்கையை, உத்வேகத்தை கண்டிப்பாக கொடுக்கும்.
மெசேஜ்
கூட்டத்தையும் தாண்டி இன்று ஜெயரஞ்சன் போன்ற அரசியல் சாராத வல்லுநர்கள், மக்களோடு மக்களாக இயங்கும் சமூக செயற்பாட்டாளர்களும் பேச உள்ளனர். கலவையாக பேச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டள்ளதும் திமுக கூட்டம் மீதான கவனத்தை அதிகரித்துள்ளது. திமுக இந்த கூட்டம் மூலம் அதிமுக - பாஜக தரப்பிற்கு கண்டிப்பாக வலுவான மெசேஜை அனுப்பும் என்று நம்பலாம்!