திருச்சி சமாதியில் கண்ணீரை அடக்க முடியாமல் கதறி அழுத மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன்..யாருக்காக தெரியுமா?
திருச்சி: மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன் திருச்சி சீராத்தோப்பில் பாரத பண்பாட்டு பயிற்சிக் கல்லூரி வளாகத்தில் உள்ள சமாதியில் கண்ணீர்விட்டு அஞ்சலி செலுத்தியது அனைவரையும் நெகிழச் செய்தது.
Recommended Video
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் தமிழக ஆர்.எஸ்.எஸ்., பாஜக தலைவர்கள் அடுத்தடுத்து ஆளுநர்களாக நியமிக்கப்பட்டனர். முதலில் ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் சண்முகநாதன், மேகாலயா ஆளுநராக நியமிக்கப்பட்டார். தமிழக அரசியல் களத்தில் அறியப்படாத முகமாக, ஆர்.எஸ்.எஸ்.-உடன் மட்டும் தன்னை இணைத்து கொண்டவர் சண்முகநாதன்.
மேகாலயா ஆளுநராக சண்முகநாதன் நியமிக்கப்பட்டாலும் அவர் நீண்டகாலம் பதவியில் நீடிக்கவில்லை. இந்திய வரலாற்றிலேயே ஒரு ஆளுநருக்கு எதிராக ஆளுநர் மாளிகை ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோர் புகார் தெரிவித்த சம்பவம் சண்முகநாதன் விவகாரத்தில் நிகழ்ந்தது. அதுவும் திருமணமே செய்து கொள்ளாத சண்முகநாதன், மேகாலய ஆளுநர் மாளிகையையே பெண்கள் கிளப்பாக மாற்றிவிட்டார் என்பதுதான் அந்த சர்ச்சை. அதனால் மேகாலயா ஆளுநர் பதவியில் இருந்து விலகினார் சண்முகநாதன்.
தமிழிசை செளந்தரராஜன்
அவரைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைவராக இருந்த டாக்டர் தமிழிசை செளந்தரராஜனுக்கு ஆளுநர் பதவி வழங்கப்பட்டது. தற்போதும் தெலுங்கானா, புதுச்சேரி ஆளுநராக பதவி வகித்து வருகிறார் தமிழிசை செளந்தரராஜன். அவருக்கு பதவி கொடுக்கப்பட்ட போது பல சீனியர் பாஜகவினரும் தங்களுக்கும் பதவி கிடைத்துவிடும் என நம்பினர்; சிலர் டெல்லியில் படுமும்முரமாக லாபியும் செய்தனர். ஆனாலும் ஒரு சிலருக்கு இன்று வரை எந்த பதவியும் கிடைக்கவில்லை.
மணிப்பூர் ஆளுநராக இல.கணேசன்
இந்நிலையில் மணிப்பூர் மாநில ஆளுநராக முதுபெரும் பாஜக தலைவரான இல.கணேசன் நியமிக்கப்பட்டார். மணிப்பூர் சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக தமிழர்கள் கணிசமாக வாழும் மோரே நகருக்கு இல.கணேசன் சென்றிருந்தார். தமிழர்கள் வாக்குகளை இலக்கு வைத்தே இல.கணேசன் அப்போது பயணம் செய்தார் எனவும் கூறப்பட்டது.
தமிழகத்தில் இல.கணேசன்
இந்நிலையில் மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன் தமிழகம் வருகை தந்துள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை ராஜ்பவனில் இல.கணேசன் சந்தித்தார். பின் திருக்கோஷ்டியூர் உள்ளிட்ட பல கோவில்களுக்கு சென்று சாமிதரிசனம் செய்தார் இல. கணேசன். திருக்கோஷ்டியூரில் இல.கணேசனை தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா சந்தித்து பேசியிருந்தார். இதன் பின்னர் திருச்சிக்கு சென்றார் இல.கணேசன்.
திருச்சி சமாதியில்..
திருச்சி சீராத்தோப்பில் உள்ள பாரத பண்பாட்டு பயிற்சிக் கல்லூரி வளாகத்துக்குச் சென்றார் இல.கணேசன். அங்குதான் இந்து முன்னணியின் நிறுவனரான இராம. கோபாலன் நினைவிடம் அமைந்துள்ளது. தமிழகத்தில் பாஜக இன்று காலூன்றுவதற்கு 1980களில் இந்து முன்னணி என்ற பெயரில் விதைபோட்டவர் ராம.கோபாலன். அதற்காக கொலைவெறித் தாக்குதல்களையும் எதிர்கொண்டவர் ராம.கோபாலன். விநாயகர் சதுர்த்தி என்றாலே இந்து முன்னணி ராம கோபாலன் பெயர் நினைவுக்கு வரும் அளவுக்கு சர்ச்சைகளின் சங்கமமாக இருந்தவர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் காலமானார் ராம.கோபாலன். அவரது நினைவிடம் பாரத பண்பாட்டு பயிற்சி கல்லூரி வளாகத்தில் உள்ளது. அங்கு சில நிமிடங்கள் மவுனமாக அஞ்சலி செலுத்திய இல.கணேசன் திடீரென கண்ணீர் விட்டு தேம்பி தேம்பி அழுதார். ராம.கோபாலனின் செயல்பாடுகளை நினைவுகூர்ந்து இல.கணேசன் கண்ணீர்விட்டு அழுதது அங்கிருந்தவர்களை நெகிழச் செய்தது.