சசிகலாவை சந்திக்க மாட்டேன்.. கூட்டணிக்கு வாய்ப்பில்ல - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்
திருச்சி: அமமுகவுடன் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை என்றும், சசிகலாவை நிச்சயம் சந்திக்க மாட்டேன் என்றும் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறியுள்ளார்.

சமூக நலத்துறை மற்றும் வருவாய்த்துறை சாா்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தலைமை வகித்தாா். 3,100 ஏழை பெண்களுக்கு திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் தாலிக்கு 8 கிராம் தங்கம் மற்றும் நிதியுதவியும் மற்றும் வருவாய் துறை சாா்பில், 1,984 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா ஆகியவற்றை அமைச்சா்கள் வெல்லமண்டி என். நடராஜன், எஸ். வளா்மதி ஆகியோா் வழங்கினர்.
விழாவில், அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன் பேசுகையில், சமூகநலத் துறையின் கீழ், ஏற்கனவே நடைமுறையிலிருந்த திருமணத்துக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தை புனரமைத்து, பட்டதாரிகளுக்கு ரூ.50 ஆயிரம், பட்டதாரி அல்லாதோருக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் தாலிக்கு 4 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா அறிமுகம் செய்தார். மேலும், தாலிக்கு வழங்கும் தங்கத்தை 8 கிராமாகவும் உயா்த்தினார். இத் திட்டத்தின் கீழ், திருச்சி மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 46 ஆயிரம் பேருக்கு ரூ. 242 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில், தமிழக அரசின் சிறப்பு ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், 9 வருவாய் வட்டங்களில் 1,984 பயனாளிகளுக்கு ரூ.10.93 கோடியில் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. பயனாளிகள் இந்த அரசுக்கு எப்போதும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.
அமைச்சா் எஸ். வளா்மதி பேசுகையில், வறுமை காரணமாக ஏழைப் பெண்களுக்கு திருமணம் நடைபெறாமல் இருக்கக் கூடாது என்பதற்காகவே திருமண நிதியுதவித் திட்டங்களை மறைந்த முதல்வா் ஜெயலலிதா புனரமைத்தார். இதன் மூலம் ஏழைப் பெண்களின் வாழ்வில் மறுமலா்ச்சி ஏற்பட்டிருப்பதை மறுப்பதற்கில்லை என்றார்.
விழாவில், மாவட்ட வருவாய் அலுவலா் த.பழனிகுமார், மாவட்ட சமூக நல அலுவலா் தமீமுனிஷா உள்ளிட்ட அரசு அலுவலா்கள், மக்கள் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள் என பலா் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்குப் பிறகு அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன், செய்தியாளா்களிடம் பேசுகையில், வரும் பேரவைத் தோ்தலில் அதிமுக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதிமுக அரசின் அனைத்து நலத்திட்டங்களும் அதிமுகவை வெற்றி பெறச் செய்யும். தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் அதிமுக தலைமையிலான கூட்டணியே வெற்றி பெறும். அதிமுக, அமமுக கூட்டணி குறித்து கட்சியின் தலைமைதான் முடிவெடுக்க வேண்டும். ஆனால், அமமுகவுடன் கூட்டணி அமைக்கும் நிலையில் அதிமுக தலைமையில்லை. அமமுக-அதிமுக கூட்டணி அமையாது. சசிகலாவை நான் சந்திக்கும் வாய்ப்பு நிச்சயமாக இல்லை" என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications