சுஜித்தை மீட்க ராணுவத்தை ஏன் அழைக்கவில்லை? மு.க.ஸ்டாலின் கேள்வி
Recommended Video
திருச்சி: மணப்பாறை அருகே ஆழ்துளைகிணற்றில் விழுந்து சிறுவன் சுஜித் உயிரிழந்துள்ள நிலையில், அவனை உயிருடன் மீட்பதற்காக தமிழக அரசு ராணுவத்தை ஏன் அழைக்கவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியில் சுஜித்தின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்த கேள்வியை எழுப்பினார்.
மேலும், சிறுவன் சுஜித் 36 அடியில் சிக்கியிருந்த நிலையிலேயே அவனை மீட்க தீவிரம் காட்டியிருக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளார்.
முகத்தை யாரிடமும் காட்டவில்லை.. சிதிலமடைந்து மீட்கப்பட்ட உடல்.. சுஜித் பிரேத பரிசோதனை சொல்வது என்ன?
கல்லறையில் அஞ்சலி
மணப்பாறை அருகே ஆவாரம்பட்டி புதூரில் உள்ள பாத்திமா நகர் கல்லறைக்கு சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சிறுவன் சுஜித் நினைவிடத்தில் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் கே.என்.நேரு, அன்பில் மகேஷ், செந்தில்பாலாஜி, திருநாவுக்கரசர் ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.
பெற்றோருடன் சந்திப்பு
சிறுவன் சுஜித்துக்கு அஞ்சலி செலுத்திய ஸ்டாலின், அங்கிருந்து நேராக நடுக்காட்டுப்பட்டி கிராமத்திற்கு சென்றார். அங்கு சுஜித்தின் தாய் தந்தையை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் வெள்ளிக்கிழமை மாலை நடந்த நிகழ்வு குறித்து அவர்களிடம் கேட்டறிந்தார்.
விமர்சனம்
சிறுவன் சுஜித்தை மீட்பதற்கான மீட்புப் பணிகளில் தமிழக அரசு மெத்தனமாக செயல்பட்டதன் காரணமாகவே உயிரிழப்பு வரை சென்றதோ என எண்ணத் தோன்றுவதாக கூறினார். அமைச்சர்கள் தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளிப்பதில் காட்டிய அக்கறையை மீட்புப் பணிகளில் காட்டவில்லை என விமர்சித்தார்.
ஏன் அழைக்கவில்லை?
சிறுவன் ஆழ்துளை கிணற்றில் சிக்கிக்கொண்டு அவனை மீட்க முடியாமல் தடுமாறிய நிலையில், இந்திய பேரிடர் மிட்புப் படையையோ, ராணுவத்தையோ தமிழக அரசு ஏன் அழைக்கவில்லை என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். மொத்தத்தில் தமிழக அரசு மெத்தனப்போக்குடன் செயல்பட்டதாக புகார் கூறினார்.
அரசியல் சாயம்
மீட்புப்பணிகளை பார்வையிட நீங்கள் ஏன் வரவில்லை என ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், தாம் வந்திருந்தால் தேவையில்லாத குழப்பம் ஏற்பட்டு அரசியல் சாயம் பூசப்படும் என்பதால் வரவில்லை. மற்றபடி தொலைக்காட்சிகளில் மீட்புப்பணிகளை பற்றி தொடர்ந்து கவனித்து தான் வந்ததாக விளக்கம் அளித்தார்.
சத்தமின்றி நிதியுதவி
இதனிடையே சுஜித்தின் தந்தையிடம் சத்தமின்றி 10 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளார் மு.க.ஸ்டாலின். வழக்கமாக இது போன்ற நிகழ்வுகளில் திமுக சார்பில் காசோலை தான் வழங்கப்படும். ஆனால் இன்று முழுத்தொகையும் ரொக்கமாக தரப்பட்டுள்ளது.