நாற்காலியில் அமர்ந்து கொண்டு மேஸ்திரி வேலை பார்க்காதீங்க.. கமல் காட்டம்
தமிழக அரசு மீது கமல்ஹாசன் கடுமையான விமர்சனம் வைத்துள்ளார்.
Recommended Video

திருச்சி: சாய்ந்த நாற்காலியில் அமர்ந்துகொண்டு, மேஸ்திரி வேலை பார்ப்பது போல புயல் பாதிப்பு மற்றும் நிவாரண பணிகளை கையாளக்கூடாது, அது சரியல்ல என்று கமலஹாசன் தமிழக அரசை காட்டமாக விமர்சித்துள்ளார்.
கஜா புயல் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் களத்தில் இறங்கி உள்ளார். இது சம்பந்தமாக மய்ய உறுப்பினர்களையும் நிவாரண, நிதி உதவிகளுக்காக துரிதப்படுத்தி வந்தார்.
தற்போது புயல் பாதிக்கப்பட்ட இடங்களில், முதல்இடமாக தஞ்சைக்கு செல்லவிருக்கிறார். இதற்காக திருச்சிக்கு வந்துள்ளார். ஒரு தனியார் ஓட்டலில் தங்கியுள்ள கமல், செய்தியாளர்களிடம் கமல் பேசும்போது, தமிழக அரசை கடுமையாக சாடினார். அப்போது, அவர் சொன்னதாவது:

கணக்கெடுப்பு பணி
கஜா புயல் சேதம் குறித்து சரியான முழுமையான தகவல் வெளியே தெரியவில்லை. கடந்த 6 நாட்களாக எங்கள் மக்கள் நீதி மய்ய தொண்டர்கள் கிராமங்களில் கஜா புயல் பாதித்த பகுதிகளில் முகாமிட்டு நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்கள் நிவாரண பணிகளை தொடர்ந்தபோது தான் சேதம் குறித்த முழுமையான தகவல் வெளியே தெரிய வந்தது. அதிகாரிகள் கணக்கெடுப்பில் கூறப்பட்டுள்ளதை விட அதிக சேதம் ஏற்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது.

மக்கள் வேதனை
நிவாரண உதவிகளை வழங்குவதற்கும், பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்கும் செல்லும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை மக்கள் விரட்டி அடிப்பதாகவும், அரசு வாகனங்களை தீ வைத்து எரித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதை காட்டுகிறது. அவர்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர். இதனை சரியாக புரிந்து கொண்டு அரசும், அதிகாரிகளும் செயல்பட வேண்டும்.

மீனவர்கள் பாதிப்பு
அமைச்சர்களுக்கு எதிராக மக்களை போராட எதிர்க்கட்சி தூண்டி விடுகிறதா என்பது பற்றி எனக்கு தெரியாது. அதேபோல நிவாரண பணிகள் மக்களிடம் கொண்டு சேர விடாமல் சிலர் தடுக்கிறார்கள் என்று கூறப்படுவதை நான் நேரில் சென்று பார்த்த பிறகுதான் கூறமுடியும். புயல் சேத பாதிப்பு, மக்கள் பாதிப்பு ஒரு புறம் இருந்தாலும் வருடந்தோறும் மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிறைய சேதம் இருக்கும்
இந்த கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களில் ஏராளமானவர்கள் குடிசை வாசிகள். இது மிகவும் வேதனையாக இருக்கிறது. பசுமையை காப்போம் என்று அரசு கூறுவதை போல், குடிசைகளையும், ஏழ்மையையும் காப்போம் என நினைக்கிறதோ என்று எண்ண தோன்றுகிறது. நான் புயல் பாதித்த பகுதிகளை நேரில் சென்று பார்த்த பின்பு அங்கு இன்னும் நிறைய சேதம் இருக்கும் என்று நினைக்கிறேன்.

முன்னெச்சரிக்கை
ஐ.நா. அமைப்பில் இருந்து ஏற்கனவே உலகம் முழுவதுக்கும் ஒரு எச்சரிக்கையை கொடுத்திருந்தனர். இயற்கையால் பேரழிவு ஏற்படும் என்று கூறியிருக்கிறார்கள். உலக வெப்பமயமாதலில் ஒரு டிகிரி உயர்ந்தால் கூட என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்று அவர்கள் அறிவுறுத்தி இருந்தனர். அதுபோன்றது இந்த கஜா புயல். இனியும் இதுபோன்று பேரழிவுகள் வரும், அது பேரிடியாக இருக்கும். எனவே இதுபோன்ற பேரழிவுகளில் இருந்து காப்பாற்றி கொள்வது குறித்து அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுக்கவேண்டும்.

கேள்விக்குறி
பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேதத்தை முழுமையாக கணக்கிட வேண்டும். தற்போது தமிழக அரசு அறிவித்திருக்கும் நிவாரணம் மற்றும் இழப்பீடு போதுமானதாக இல்லை. தென்னைக்கு ரூ.1,100 வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இது போதுமானது கிடையாது. கஜா புயலால் இன்னும் 4 ஆண்டுகளுக்கு பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வு கேள்விக்குறியாகி உள்ளது.

யாருமே வரவில்லை
இதனை அரசு கணக்கில் கொண்டு நிவாரணம் வழங்கவேண்டும். இதுபோன்ற புயல் பாதிக்கப்பட்ட நேரங்களில் வெளி மாநிலங்களில் எவ்வாறாக இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதோ, அதேபோல் தமிழக அரசும் வழங்கவேண்டும். புயல் பாதித்து கடந்த 7 நாட்கள் ஆகியும் மத்திய அரசிடம் இருந்து சேதத்தை பார்வையிடவோ, மதிப்பிடவோ யாரும் வரவில்லை.

உணர்ந்து உதவ வேண்டும்
சாய்ந்த நாற்காலியில் அமர்ந்துகொண்டு, மேஸ்திரி வேலை பார்ப்பது போல புயல் பாதிப்பு மற்றும் நிவாரண பணிகளை கையாளக்கூடாது. அது சரியல்ல. பாதிப்பின் தன்மையை உணர்ந்து மக்களுக்கு உதவவேண்டும் என்றார் கமல்.












Click it and Unblock the Notifications