கழிவுநீரில் வீசப்பட்ட மோடி படம்.. ரேஷன் கடையில் மாட்ட முயன்ற பாஜகவினர் கைது! திருச்சியில் பரபர
திருச்சி: ரேஷன் கடையில் பிரதமர் மோடியின் படத்தை வைக்க முயன்ற பாஜகவினரை திமுக மாநகராட்சி உறுப்பினரை தாக்க முயன்றதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய 50க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
Recommended Video
திருச்சி பொன்னகர் காமராஜபுரம் தெருவில் உள்ள அமராவதி கூட்டுறவு நியாயவிலைக் கடையில் திருச்சி கண்டோன்மெண்ட் மண்டலத் பாஜக தலைவர் பரமசிவம் தலைமையில் அக்கட்சியினர் பிரதமர் மோடியின் உருவப்படத்தை கடையில் மாட்டினர்.
அப்போது ரேஷன் கடையில் நின்றுகொண்டிருந்த பொதுமக்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த திமுகவினர் மற்றும் 55-வது வார்டு கவுன்சிலர் ராமதாஸ் ஆகியோர் மோடியின் பாடத்தை மாட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

திமுக - பாஜக இடையே தள்ளு முள்ளு
இதனால் இருதரப்பினருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதுகுறித்து திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் உதவி ஆணையர் அஜய்தங்கம் தலைமையிலான காவல்துறையினர் இருதரப்பினரையும் சமாதானம் செய்தனர். இந்த மோதலின்போது பிரதமர் மோடி படம் கீழே விழுந்து நொறுங்கியது.

கழிவுநீரில் வீசப்பட்ட மோடி படம்
அப்போது பத்திரிக்கையாளர்கள் கீழே விழுந்து கிடந்த மோடியின் படத்தை வீடியோ எடுக்க முற்பட்டபோது அப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் வேகமாக வந்து மோடியின் படத்தை எடுத்து கழிவுநீரில் வீசி எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் கண்டோன்மெண்ட் மண்டல பாஜக தலைவர் பரமசிவத்தை திமுகவினர் தாக்கியதாக கூறப்படுகிறது

ரேஷன் கடை முன் தர்ணா
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் ராஜசேகர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் ரேஷன் கடைக்கு முன் நின்று கொண்டிருந்த காவல்துறை அதிகாரிகளிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த திமுகவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரேஷன் கடைக்கு முன்பாக அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு அவர்களை வெளியேற்றக் கோரினர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
இந்த நிலையில் இன்று காலை 50 க்கும் மேற்பட்ட பாஜகவினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திமுக கவுன்சிலர் ராமதாஸை கைது செய்ய வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே எந்தவித அனுமதி இல்லாமல் முற்றுகையில் ஈடுபட்டதாகக் கூறி காவல்துறையினர் அவர்களை கலைந்து செல்ல வலியுறுத்தினர்.

பாஜகவினர் கைது
ஆனால் அவர்கள் தொடர்ந்து முற்றுகையில் ஈடுபட்டதால் காவல்துறையினர் அவர்களை குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர். இதன் காரணமாக மாவட்ட ஆட்சியாளர்கள் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட அனைவரையும் காவல்துறையினர் தனியார் திருமணம் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.












Click it and Unblock the Notifications