‛குரங்கு’ என விமர்சனம்.. பாஜக தலைவர் அண்ணாமலையை சுளீரென தாக்கி பேசிய அன்பில் மகேஷ்.. என்ன சொன்னார்?
திருச்சி: பாஜக தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களை பார்த்து குரங்கு என பேசியது பற்றி கேள்விக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் சுளீரென பதிலளித்தார்.
திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் நவம்பர் 4ம் தேதி திருச்சிக்கு வருகை தரும் தமிழக முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை குறித்தும், நவம்பர் 6ஆம் தேதி நடைபெற இருக்கும் திருச்சி தெற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.

இந்தியாவில் எங்கும் இல்லை
கூட்டத்திற்கு பின் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கொரோனா காலகட்டத்தில் பள்ளிக்கூடத்தை எப்படி திறப்பது? எப்படி எல்லாம் பாடத்தை நடத்தி முடிப்பது என்று யோசித்தபோது பள்ளிக்கூடத்தை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் திறங்கள் ஆனால் இரண்டு வருடம் குழந்தைகளுக்கு படிப்பு இடைவேளை விட்டு விடக்கூடாது என்று ஆலோசனை கூறி இல்லம் தேடி கல்வித் திட்டத்திற்கு ஊக்கமளித்தார். இந்தியாவில் எந்த ஒரு அரசாங்கமும் இந்த திட்டம் போல் எண்ணி பார்க்கவில்லை.

மிகப்பெரிய வெற்றி
1 லட்சத்து 76 ஆயிரம் மையம் எங்களுக்கு இல்லம் தேடி கல்வித் திட்டத்திற்கு தேவைப்பட்டது. ஒரு மையத்துக்கு 20 குழந்தைகள் வீதம் 34 லட்சம் குழந்தைகளுக்கு நாங்கள் திட்டமிட்டோம். இந்த திட்டம் செயல்படுத்தி நேற்றோடு ஒரு வருடம் ஆவதால் முன்னறிவிப்பு இல்லாமல் குன்னூரில் ஒரு பள்ளிக்கு சென்று ஆய்வு நடத்தினேன். 20 பேருக்கு 1 தன்னார்வலர் பாடம் எடுத்து கொண்டு இருந்தார் -அப்போது இந்த திட்டம் மிகப்பெரியதாகும் அளவில் வெற்றி பெற்றிருப்பதை நான் உணர்ந்தேன். இல்லம் தேடி கல்வி திட்டம் தொடருமா என்கிற கேள்விக்கு? இன்னும் கொஞ்சம் காலம் இந்த திட்டம் செயல்படுத்தினால் சிறப்பாக இருக்கும் என்பது தான் உண்மை.

சிறுவனுக்கு சிகிச்சை
அக்டோபர் இரண்டாம் தேதி ஹீலியம் பலூன் வெடித்து விபத்தில் பள்ளி மாணவன் உடலில் பல்வேறு பகுதிகளில் கற்கள் பதிந்து பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது - மிக கடுமையான பாதிப்பு ஏற்பட்டதால் சிறு குடல் பாதிப்பு எடுத்துவிட்டு பெருங்குடல் வாயிலாக மட்டுமே பள்ளி மாணவன் நடமாடும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேல் சிகிச்சைக்காக சிறுவனின் தாயாரிடம் பேசி ஆம்புலன்ஸ் வாயிலாக நானே ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளேன். சென்னையில் சிகிச்சை மற்றும் தேவையான அனைத்து உதவிகளையும் நானே செய்து தருகிறேன் என்று உறுதி அளித்துள்ளேன்'' என்றார்.

அண்ணாமலை பற்றிய கேள்வி
பாஜக தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களை பார்த்து குரங்கு என்று பேசியது குறித்த கேள்விக்கு, அமைச்சர் அன்பில் மகேஷ், ‛‛அவர் பாடம் கற்றுக் கொண்டதற்கு தகுந்தவாறு அவர் நடந்து கொள்கிறார். நாங்கள் பாடம் கற்றுக் கொண்டது போல் நாங்கள் நடந்து வருகிறோம்'' என்றார்.












Click it and Unblock the Notifications