ஊர் ஊராக.. அடுத்தடுத்து பாயும் வழக்கு.. தோண்டப்படும் குற்றச்சாட்டுகள்.. சாட்டை துரைமுருகனுக்கு செக்
திருச்சி: வாகன நிறுவன ஊழியரை மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட சாட்டை துரைமுருகன் மீது பல்வேறு மாவட்டங்களில் மேலும் வழக்குகள் பதியப்பட்டு உள்ளன.
திருச்சியில் வாகன நிறுவன ஊழியர் ஒருவரை மிரட்டியதாக யூ டியூபர் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார். அடியாட்களுடன் சென்று வாகன நிறுவன ஊழியரை மிரட்டியதாக துரைமுருகன் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
விடுதலை புலிகள் பிரபாகரன் குறித்து போஸ்ட் செய்ததற்காக வினோத் என்ற நபரை திருச்சியில் சாட்டை துரைமுருகன் மிரட்டிய நிலையில், அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

கைது
இவர் மீது பிரிவு 148 - கலகம் செய்யும்போது பயங்கரமான ஆயுதங்களை பயன்படுத்துதல், பிரிவு 447 - அத்துமீறி நுழைதல், பிரிவு 147 - கலகம் செய்தல், 294(பி) - பிறருக்குத் தொல்லை தரும் விதமாக மோசமாக பேசுவது, 506 (1) - மிரட்டல் விடுப்பது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. இது போக முன்னாள் முதல்வர் கருணாநிதியை தவறாக பேசிய வழக்கும் உள்ளது.

வேறு
இந்த வழக்குகள் காரணமாக துரைமுருகன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இவர் மீது மேலும் பல்வேறு இடங்களில் வழக்கு பதியப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டமாக பல்வேறு காவல்நிலையங்களில் இவர் மீது வழக்கு பதியப்பட்டு வருகின்றது. சாட்டை துரைமுருகன் மீது தஞ்சை திருப்பணந்தாள் காவல்நிலையத்தில் நான்கு பிரிவுகளில் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரூர்
திருச்சி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கரூரிலும் இவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதியை அவதூறாக பேசியது, குழந்தைகள் படத்தை தவறாக பயன்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு புகார்களில் வழக்கு பதியப்பட்டுள்ளது. இவரின் பழைய வீடியோக்களில் தவறாக பேசியது, பொய்யாக அவதூறு பரப்பியது உள்ளிட்ட சம்பவங்கள் குறித்தும் புகார்கள் வைக்கப்பட்டுள்ளன.

பல்வேறு மாவட்டங்கள்
ஒரு மாவட்ட கோர்ட்டில் விசாரணை முடிந்தால் உடனே அடுத்த மாவட்ட கோர்டில் ஆஜர்படுத்துவதற்காக போலீஸ் இவரை ஊர் ஊராக அழைத்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. கரூரை தொடர்ந்து தஞ்சாவூரிலும் இவர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளார். பல்வேறு மாவட்டங்களில் வழக்கு பதியப்பட்டுள்ளதால், இவர் இப்போதைக்கு பெயில் பெற வாய்ப்பு குறைவு என்றும் கூறப்படுகிறது.

பழைய புகார்கள்
யு டியூப் பக்கத்தில் இவர் பல பொய்யான அவதூறு கருத்துக்களை பேசியதாக புகார்கள் உள்ளன. சிலரை மிரட்டியதாகவும் புகார்கள் உள்ளன. இதனால் விரைவில் சாட்டை துரைமுருகன் மீது முக்கியமான வேறு சில சட்டங்களில் நடவடிக்கை எடுக்கப்படவும் வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications