மலைவாழ் மக்களும் போட்டுகிட்டாங்க.. "நீங்கள்" செய்யாதது வேதனையா இருக்கு.. ராதாகிருஷ்ணன்
திருச்சி: தமிழகத்தில் 49 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசியையே செலுத்தவில்லை. இந்த 49 லட்சம் பேரில் பெரும்பாலானவர்கள் படித்தவர்கள் என திருச்சி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த பின் முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேற்று காலை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, திருச்சி மருத்துவமனையில் சிறுநீரகம் தானம் பெற்று சிகிச்சை பெற்று வரும் நோயாளியை பார்த்து நலம் விசாரித்தார். அத்துடன், அவருடைய மனைவி மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். திருச்சி அரசு மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட 55 வயது நோயாளியைப் பாா்வையிட்டு, அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவக் குழுவை ராதாகிருஷ்ணன் பாராட்டினாா்.

ரூ 2 கோடி
மேலும், மருத்துவமனையில் உள்ள ரூ. 2 கோடியிலான மாா்பகப் புற்றுநோய் கண்டறியும் கருவி, ரூ.1 கோடியிலான டிஜிட்டல் புளோரோஸ்கோபி கருவியின் செயல்பாட்டையும் ஆய்வு செய்தாா். பின்னர் அங்கு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளை சந்தித்த அவர், அவர்களுக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சை விவரங்களை கேட்டறிந்தார்.

அரசு மருத்துவக் கல்லூரி
ஆய்வின்போது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் கே. வனிதா, மருத்துவமனைக் கண்காணிப்பாளா் அருண்ராஜ், உதவி நிலைய மருத்துவ அலுவலா் சித்ரா, மருத்துவப் பணிகள் துணை இயக்குநா் லட்சுமி, மருத்துவா்கள் பாலகிருஷ்ணன், பிரபாகரன், ரவி, இளங்கோவன் ஆகியோா் உடனிருந்தனா்.

மூளைச்சாவு
இதைத் தொடர்ந்து தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது: திருச்சி அரசு மருத்துவமனையில் 55 வயதில் மூளைச்சாவு அடைந்த நபரிடம் இருந்து உடல் உறுப்புகள் தானம் பெற்று மற்றவர்களுக்கு பொருத்தி உள்ளனர்.

உடல் உறுப்பு தானம்
திருச்சியில் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வந்தவர்களுக்கும், அதை பெற்று வெற்றிகரமாக தானம் கொடுத்த டாக்டர்களுக்கும் எனது பாராட்டுக்கள். திருச்சியில் இது 2-வது முறையாகும். தமிழகத்தில் 6,640 பேர் சிறுநீரகத்துக்காகவும், 314 பேர் கல்லீரலுக்காகவும், 40 பேர் இதயத்துக்காகவும், 24 பேர் கைகள் போன்ற உடல் உறுப்புகளுக்காகவும் காத்து இருக்கின்றனர்.

தமிழகத்தில் முன்னுரிமை
உடல் உறுப்பு தானத்தை பொறுத்தவரை தமிழகத்தில் உள்ளவர்களுக்கு தான் முதலில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. தமிழகத்தில் அந்த உறுப்புக்கான தேவை இல்லாத பட்சத்தில் தான் இந்திய அளவில் வழங்கப்படும். அதற்கு பிறகு கடைசி வாய்ப்பாகத்தான் வெளிநாட்டினருக்கு தானம் அளிக்கிறோம்.

2ஆவது அலை
கொரோனோ கட்டுக்குள் இருந்தாலும் தொடர்ந்து கண்காணிப்பு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. 2-வது அலையில் 3 லட்சம் பேர் வரை படுக்கையில் இருந்தனர். ஆனால் இன்று முழுவதும் குறைந்துள்ளது. இதற்கு காரணம் தடுப்பூசிகள் தான். 92 சதவீதம் பேர் தடுப்பூசிகளை செலுத்தி கொண்டுள்ளனர். தடுப்பூசி செலுத்தியதால்தான் 3-வது அலையில் இறப்பு இல்லாமல் இருந்தது.

பிஏ2 ஓமிக்ரான்
இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ள கொரோனாவின் உருமாறிய எக்ஸ்.இ. வைரஸ் தமிழகத்தில் கண்டறியப்படவில்லை. பிஏ2 ஓமிக்ரான் வகை தான் தமிழகத்தில் உள்ளது. எனவே, தமிழக மக்கள் அச்சப்பட வேண்டாம். கொரோனா தொற்றுப் பரவலும் 29 மாவட்டங்களில் பூஜ்ஜியம் என்ற நிலைக்கு வந்துவிட்டது. சென்னையில் மட்டும் 10 என்ற எண்ணிக்கையில் உள்ளது.

பூஜ்ஜியம்
அனைத்து மாவட்டங்களிலும் பூஜ்ஜியம் என்ற நிலை வர வேண்டும் என்பதே அரசின் இலக்கு. பொதுமக்களும் தொற்று குறைந்துவிட்டதால் கவனக்குறைவாக இருத்தல் கூடாது. முகக் கவசம் அணிதல், தடுப்பூசி செலுத்துதல், சமூக இடைவெளி ஆகியவற்றைப் பின்பற்ற வேண்டும். மரபியல் ரீதியாக நாங்கள் தொடர்ந்து பரிசோதனை செய்ய அறிவுறுத்தி உள்ளோம். சர்வதேச விமான நிலையத்தில் 2 சதவீதம் என்ற அளவில் தோராயமாக பரிசோதனை மேற்கொண்டு வருகிறோம்.

தடுப்பூசி
தமிழகத்தில் 1 கோடியே 37 லட்சத்து 90 ஆயிரத்து 725 பேர் 2-வது தடுப்பூசியும் செலுத்தவில்லை. 49 லட்சத்து 2 ஆயிரத்து 501 பேர் முதல் தடுப்பூசி கூட போடாமல் உள்ளனர்.
மலைவாழ் மக்கள் கூட தடுப்பூசி செலுத்தி ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர். ஆனால் படித்தவர்கள் தடுப்பூசி போட ஒத்துழைக்காதது தான் வேதனை அளிக்கிறது.

பூஸ்டர் தடுப்பூசி
பூஸ்டா் தடுப்பூசி செலுத்தக் கட்டணம் என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் இலவசமாக அளிக்கப்படும் தடுப்பூசியை தவணை தவறிய அனைவரும் செலுத்திக் கொள்ள வேண்டும். கொரோனா தொற்றால் 2 ஆண்டுகளாக இதர சுகாதார விஷயங்களில் கவனம் செலுத்த இயலவில்லை. குறிப்பாக தாய்-சேய் நலத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். தாய், சேய் இறப்பை வெகுவாகக் குறைக்க வேண்டும்.

வெளிச்சந்தை
உயிா் காக்கும் மருந்துகள் பல வெளிச்சந்தையில் அதிக விலைக்கு உள்ளன. ஆனால், மருத்துவச் சேவைகள் கழகம் மூலம் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படும் மருந்துகளை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் 60 லட்சம் போ் பயன் பெற்றுள்ளனா். இவ்வாறு முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறினார்.












Click it and Unblock the Notifications