“ஸ்டாலின் கவுன்சிலரா கூட ஆகியிருக்க முடியாது?” காட்டமாக விமர்சித்த முதல்வருக்கு எடப்பாடி ரிப்ளை!
திருச்சி: "பொய் சொல்லலாம் ஆனால் பழனிசாமி அளவுக்கு பொய் சொல்லக்கூடாது" என இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியிருந்த நிலையில், முதல்வர் ஸ்டாலினுக்கு பதில் அளித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.
விருதுநகர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 57 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், வீட்டுமனை பட்டாக்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். அதைத்தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார்.

கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்: “மக்கள் நலத் திட்டங்களுக்கு மூலதன செலவுகளை மேற்கொள்ளாமல் கலைஞர் பெயரில் மக்களுக்கு பயன்படாத திட்டங்களுக்கு கோடிக்கணக்கில் நிதியை நான் ஒதுக்கி வருவதாக எடப்பாடி பழனிசாமி உளறி இருக்கிறார். அதை படித்தவுடன் எனக்கு சிரிப்பு தான் வந்தது. ஒருவர் பொய் சொல்லலாம் ஆனால் ஏக்கர் கணக்கில் சொல்லக்கூடாது என்று வேடிக்கையாக சொல்வார்கள். எனவே இதை மாற்றி, பொய் சொல்லலாம் ஆனால் பழனிசாமி அளவுக்கு பொய் சொல்லக்கூடாது என்று தான் இப்போது சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு புளுகு மூட்டையை அவிழ்த்து விடுகிறார் எடப்பாடி பழனிசாமி.
இப்படி வாய்த்துடுக்காவும், ஆணவமாவும் பேசி பேசித்தான் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள். நான் உறுதியாக சொல்கிறேன். உங்கள் ஆணவத்துக்காகவே, தமிழ்நாட்டு மக்கள் உங்களை இனிமேல் தோற்கடித்துக் கொண்டுதான் இருப்பார்கள். தமிழ்நாட்டை காக்க 80 ஆண்டு காலம் ஓயாமல் உழைத்த, கலைஞர் பெயரை மக்கள்நலத் திட்டங்களுக்கு வைக்காமல், யார் பெயரை வைப்பது? பதவி சுகத்துக்காக, கரப்பான்பூச்சி மாதிரி தரையில் ஊர்ந்து சென்றீர்களே, உங்கள் பெயரையா வைக்க முடியும்? ” எனப் பேசினார் முதல்வர் ஸ்டாலின்.
எடப்பாடி பழனிசாமி பதிலடி: இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினின் பேச்சுக்கு பதில் கொடுத்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. இன்று திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “அரசு விழாவில் பேசும்போது, நான் ஒழுங்காக ஆட்சி செய்யவில்லை எனப் பேசி இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். 10 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை தந்தது அதிமுக. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு 4 ஆண்டுகள் 2 மாத காலம் சிறப்பான ஆட்சியை வழங்கினோம்.
கவுன்சிலராக கூட ஆகியிருக்க முடியாது: எனக்கு திறமையில்லை, விமர்சிக்க தகுதி இல்லை என்கிறார் ஸ்டாலின். கருணாநிதி குடும்பத்தில் மட்டும் பிறக்கவில்லை என்றால் ஸ்டாலின் கவுன்சிலர் கூட ஆகியிருக்க முடியாது. நான் முதல்வராக இருந்தபோது நிறைவேற்றிய திட்டங்களை புள்ளி விவரத்துடன் துண்டுச்சீட்டு இல்லாமல் பேசுகிறேன். ஸ்டாலினும் கடந்த 3 ஆண்டு ஆட்சியில் நிறைவேற்றிய திட்டங்களைப் பற்றி பேசத் தயாரா?
நான் சாதாரண கிளைச் செயலாளராக இருந்து இவ்வளவு பெரிய இயக்கத்தின் பொதுச்செயலாளராக உயர்ந்தவன். உங்களைப்போல், தந்தை அடையாளத்தை வைத்து பதவி பெறுவது எல்லாம் திறமையில்ல. கருணாநிதியின் அடையாளத்தை வைத்துத்தான் ஸ்டாலின் கட்சித் தலைவர் ஆனார். முதல்வர் ஆனார்.
உதயநிதிக்கு எப்படி பதவி வந்தது?: நான் அப்படியில்லை. சாதாரண விவசாயி குடும்பத்தில் பிறந்து படிப்படியாக வந்தவன். உதயநிதி ஸ்டாலின் எந்த தகுதியில் அமைச்சர் ஆனார்? கருணாநிதியின் பேரன், ஸ்டாலின் மகன் என்பதால் தான் அவருக்கு எம்.எல்.ஏ பதவி, அமைச்சர் பதவி, துணை முதல்வர் பதவி எல்லாம் கிடைக்கிறது.
திமுக 2021 சட்டசபை தேர்தலின்போது வெளியிட் அறிவிப்புகளில் 10 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. மக்களை ஏமாற்றி கொல்லைப்புறம் வழியாக ஆட்சிக்கு வந்து விட்டனர். அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக, அம்மா மினி கிளினிக் திட்டத்தை முடக்கி ரத்து செய்து விட்டனர். மடிக்கணினி திட்டம் ரத்து செய்து விட்டனர்.
வேண்டுமென்றே திட்டமிட்டு என்னைப் பற்றி முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துப் பேசுவது கேலிக்கூத்தாக உள்ளது. கொரோனா காலத்தில் பாராட்டு, விருதுகளை பெற்றது அதிமுக அரசு. பல கல்லூரிகளை திறந்தோம். திமுக ஆட்சியில் குற்றங்கள் அதிகரித்துள்ளது; குற்றங்கள் அதிகரிக்க கஞ்சா போதையே காரணம்.
தமிழகத்தில் திராணியற்ற அரசாங்கம் நடக்கிறது. காவிரி குண்டாறு திட்டம் உள்ளிட்டவை கிடப்பில் போடப்பட்டுள்ளன. சேலத்தில் தலைவாசல் பகுதியில் கால்நடை பூங்கா கட்டி முடிக்கப்பட்டு இரண்டரை ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இதுவரை திமுக அரசு அதனை திறக்காத திராணியற்ற ஆட்சி நடக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications