இது எனக்கு தேவையில்லாத வேலை; ரொம்ப ஃபீல் பண்றேன்; புலம்பும் பாரிவேந்தர்!
திருச்சி: அரசியலுக்கு ஏன் வந்தோம் என நினைத்து மிகவும் வருத்தப்படுவதாக புலம்பியிருக்கிறார் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனரும், எஸ்.ஆர்.ஆம். பல்கலைக்கழகத்தின் அதிபருமான பாரிவேந்தர்.
இனி எந்த தேர்தலிலும் கூட்டணி வைக்கக்கூடாது என்பதே தனது நிலைப்பாடு எனத் தெரிவித்திருக்கிறார்.
மிகவும் நொந்துபோன மனநிலையில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் இதனைக் கூறியிருக்கிறார்.

பச்சைமுத்து
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் அதிபரான பச்சைமுத்து என்ற பாரிவேந்தர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய ஜனநாயக கட்சி என்ற அரசியல் இயக்கத்தை தொடங்கினார். இதையடுத்து தான் சார்ந்த உடையார் சமுதாயத்தினரை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட அவர், அது எதிர்பார்த்த வகையில் கைகொடுக்காததால் பாஜக, திமுக என கூட்டணி வைக்கத் தொடங்கினார். அதன்படி கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று இப்போது எம்.பி.யாகவும் இருக்கிறார்.

தொகுதிப்பக்கம்
பாரிவேந்தரின் உடல்நலமும் வயதும் அவரை பயணம் செய்ய விடாமல் தடுத்ததால் பெரம்பலூர் தொகுதிப்பக்கம் வருவதையே அவர் நிறுத்திக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் இது தொடர்பான சலசலப்பு ஏற்பட்டதை அடுத்து, தனது பிரதிநிதியாக தன்னுடன் எப்போதும் இருக்கும் ஜெயசீலனை தொகுதிக்கு அனுப்பி வைத்து அதிகாரிகளிடம் தொகுதி வளர்ச்சிப் பணிகள் குறித்து பேச வைத்து வந்ததாக கூறப்படுகிறது.

வருத்தம்
இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த பாரிவேந்தர், அரசியலுக்கு ஏன் வந்தேன் என நினைத்து வருதப்படுகிறேன் என மனம் நொந்த நிலையில் புலம்பியிருக்கிறார். மேலும், யார் ஆட்சிக்கு வந்தாலும் கொள்ளை அடிப்பது நிற்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். உயர்கல்வி நிறுவனங்கள் நடத்தி வரும் அவர், இந்த குற்றச்சாட்டை முன் வைக்கிறார் என்றால் நிச்சயம் உயர்கல்வித்துறையை மனதில் வைத்து தான் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

கூட்டணி கிடையாது
மேலும் திமுகவுடன் தனக்கு நட்பும் இல்லை விரோதமும் இல்லை எனத் தெரிவித்தார். இனி வரும் எந்த தேர்தலிலும் இந்திய ஜனநாயக கட்சி யாருடனும் கூட்டணி வைக்காது என உறுதியளித்த அவர், இவர்களோடு கூட்டணி வைத்தால் அவர்கள் கோபப்படுகிறார்கள், அவர்களோடு கூட்டணி வைத்தால் இவர்கள் கோபப்படுகிறார்கள் என மனதில் உள்ளதை மறைக்காமல் போட்டுடைத்தார். பாரிவேந்தர் அவர்கள், இவர்கள் என குறிப்பிட்டது மத்தியில் ஆளும் பாஜகவையும், மாநிலத்தில் ஆளும் திமுகவையும் கருத்தில் கொண்டு தான் இருக்கும் எனத் தெரிகிறது.

ஜெய்பீம் படம்
இதனிடையே ஜெய்பீம் திரைப்பட விவகாரத்தில் காலண்டரை வைத்து அரசியல் செய்வதாகவும் அவர்களுக்கு வேறு பிரச்சனை கிடைக்காததால் இதை கையில் எடுத்துள்ளதாகவும் பொத்தாம் பொதுவாக கூறினாரே தவிர பாமகவை வாய்தவறியும் குறிப்பிடவில்லை. ஏரி குளங்களை ஆக்கிரமித்து எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம் கட்டப்பட்டுள்ளதாக கூறி கடந்த 2015-ம் ஆண்டு ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையின் காரணமாக ஐ.ஜே.கே. -பாமக இடையே ஏற்கனவே அரசியல் பகை இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications