திருச்சி ரயில் தண்டவாளத்தில் மர்ம பை.. திறந்து பார்த்து ஷாக்கான போலீஸார்.. பரபரப்பில் மலைக்கோட்டை!
திருச்சி: திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் கிடந்த மர்ம பையால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பையில் அல்வா பொட்டலங்கள் இருந்தன.
பயங்கரவாதிகள் 6 பேர் தமிழகத்தில் ஊடுருவியதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். திருச்சியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில்வே பாதுகாப்பு படையினர் மெட்டல் டிடெக்டர் கருவி, மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தி வருகின்றனர்.

மர்ம பை
மேலும் பயணிகளின் உடைமைகளை தீவிர சோதனை செய்து அனுப்புகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை 2-வது நடைமேடையில் தண்டவாளத்தில் ஒரு மர்ம பை கிடந்தது.

பாதுகாப்பு படை
இதனை அங்குள்ள ரயில்வே ஊழியர்கள் கண்டனர். அவர்கள் இது குறித்து உடனடியாக ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். ரயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் விரைந்து வந்து மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் பையை சோதனையிட்டனர்.

பொட்டலங்கள்
இதில் வெடி பொருட்கள் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து பையை திறந்து பார்வையிட்டனர். அதில் துணிகள் மற்றும் அல்வா பொட்டலங்கள் இருந்தன.

செல்போன் எண்
மேலும் ஆதார் அட்டை ஒன்றும் இருந்தது. அதில் தஞ்சாவூரை சேர்ந்த அய்யம்பெருமாள் என்ற பெயர் இருந்ததை கண்டனர். அந்த அட்டையில் இருந்த செல்போன் எண்ணிற்கு ரயில்வே பாதுகாப்பு படையினர் தொடர்பு கொண்டு விசாரித்தனர்.

அய்யம்பெருமாள்
இதில் மறுமுனையில் பேசிய நபர், அய்யம்பெருமாளின் மனைவி என்று தெரிவித்துள்ளார். மேலும், அய்யம்பெருமாள் கேரளாவில் தொழிலாளியாக வேலை பார்த்து வருவதும், அவர் ரயிலில் தஞ்சாவூருக்கு பயணித்ததும், பயணத்தின்போது அவர் பையை தவறவிட்டதும் தெரியவந்தது.

தண்டவாளம்
இதைத்தொடர்ந்து அவரை திருச்சி வந்து பையை வாங்கி செல்லுமாறு ரயில்வே பாதுகாப்பு படையினர் அறிவுறுத்தினர். இதற்கிடையே தண்டவாளத்தில் மர்ம பை கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஊடுருவுதல்
ஏற்கெனவே பயங்கரவாதிகள் ஊடுருவியதாக தீவிர சோதனை நடந்து வருகிற நிலையில், மர்ம பை கிடந்த சம்பவம் திருச்சி ரயில் நிலையத்தில் பயணிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications