திருச்சி அரசு மருத்துவமனையில்.. நர்சிங் மாணவியிடம் வரம்பு மீறிய போலீஸ்காரர்.. போக்சோவில் கைது!
திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறைக் கைதிக்கு பாதுகாவலராக இருந்த போலீஸ்காரர் ஒருவரே, அங்கு பணிக்கு வந்த நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸ்காரர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யபட்டு கைது செய்யப்பட்டார். தற்போது அவர், பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் சமீப நாட்களாக பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. பெண்களுக்கு பாலியல் தொல்லை, வன்கொடுமை என தினம் தினம் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக தமிழக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. தமிழக அரசும் இதற்கான தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சிறைக்கைதிக்கு உடல்நலக் குறைவு
இருந்த போதிலும் அவ்வப்போது இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறுகின்றன. இந்த நிலையில் மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய போலீஸ்காரர் ஒருவரே, நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சிறைக் கைதிக்கு பாதுகாவலராக சென்ற போலீஸ்காரரே, அங்கு பணிபுரிந்து வந்த நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
பெரம்பலூர் நகர போலீஸ் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வருபவர் இளம்ராஜா (வயது 36). இவர் அப்பகுதியில் தங்கியிருந்து வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த வெங்கடேசபுரத்தை சேர்ந்த பிரித்திகை வாசன் என்ற சிறைக்கைதிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை
இதையடுத்து கைதிக்கு பெரம்பலூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அவர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிறைக் கைதிகளுக்கு சிகிச்சையளிக்கும் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு பாதுகாப்புக்காக போலீஸ்காரர் இளம்ராஜா அனுப்பி வைக்கப்பட்டார்.
சிறைக்கைதிகள் அனுமதிக்கப்பட்ட மருத்துவ வார்டில், முதலாம் ஆண்டு நர்சி பயிற்சி மாணவி வந்திருக்கிறார். அந்த மாணவி கைதி பிரித்திகை வாசனுக்கு சிகிச்சையளித்துள்ளார். அப்போது அருகில் நின்ற போலீஸ்காரர் இளம்ராஜா நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, இதுபற்றி மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்து இருக்கிறார். இதையடுத்து அவர்களது அறிவுரையின் பேரில், மாணவி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போக்சோ சட்டத்தில் போலீஸ்காரர் கைது
இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் போலீஸ்காரர் இளம்ராஜா நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அவரை பணியிடை நீக்கம் செய்தும் உத்தரவிட்டார். பாதுகாப்பு அளிக்க வேண்டிய போலீஸ்காரர் ஒருவரே நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications