கங்கிராஜுலேஷன்ஸ் சாந்தி.. 11வது குழந்தைக்கு அம்மாவாக போறீங்க நீங்க!
11-வது பிரசவத்துக்கு வர மறுத்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
முசிறி: சாந்தி - கண்ணன்!! இவங்கதான் இந்த செய்தியின் ஹீரோ, ஹீரோயின்!!
முசிறியை சேர்ந்த இணக்கமான, ஒற்றுமையான, அன்பான, காதல் நிறைந்த தம்பதி!! கண்ணனுக்கு 47 வயது, சாந்திக்கு 45 வயது. கல்யாணம் நடந்து 20 வருஷங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இவர்களுக்கு பிள்ளைகளோ 10!!
சாந்தி பிடிவாதம்
கங்கிராஜுலேஷன்ஸ் சாந்தி.. எஸ்.. இப்போது சாந்தி மீண்டும் கர்ப்பமாக இருக்கிறார். 11-வது குழந்தை பிறக்க போகிறது. சந்தோஷமான விஷயம்தான். ஆனால் சாந்தி பிரசவத்துக்கு ஆஸ்பத்திரி வர பிடிவாதம் பிடித்ததுதான் சீரியஸான சமாச்சாரம் ஆகிவிட்டது.
தாத்தா - பாட்டி
இதுவரை தன்னுடைய 10 பிள்ளைகளையும் வீட்டில்தான் பெற்றெடுத்தாராம். அதில் 2 பேர் இறந்து விட்டார்கள். இந்த காதல் தம்பதியின் 3 மகள்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டது. இதில் மூத்த மகளுக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தையும் உள்ளது. தாத்தா-பாட்டியான கண்ணன்-சாந்திக்கு மீண்டும் குழந்தை பெற்றுக் கொள்ள ஆசை வந்திருக்கிறது.
திடீர் எஸ்கேப்
தற்போது சாந்திக்கு பிரசவ காலமும் நெருங்கிவிட்டது. இந்த விஷயம் அறிந்த தாய், சேய் நல அலுவலரும், ஆரம்ப சுகாதார நிலைய நர்ஸ்களும் சேர்ந்து சாந்தியை ஆஸ்பத்திரிக்கு கூட்டி வர அவர்கள் வீட்டுக்கு கிளம்பி சென்றார்கள். மெடிக்கல் ஆபீஸர்களும், நர்சுகளும் வீட்டுக்கு வருவதை தெரிந்து கொண்ட சாந்தி, வீட்டிலிருந்து திடீர் எஸ்கேப்!! எப்படியும் வீட்டுக்கு வந்துட்டா, ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போய்டுவாங்கன்னு நினைச்ச சாந்தி, காவிரி ஆற்றங்கரை பக்கம் அவசர அவசரமாக கிளம்பி போய்விட்டார்.
காவிரி ஆற்றங்கரை
வீட்டில் சாந்தியை காணாததால், முசிறி மகளிர் போலீசாருக்கு நர்சுகள் தகவல் தெரிவிக்க அவர்களும் விரைந்து வந்தார்கள். இப்போது ஆபீசர்கள், நர்சுகள், மகளிர் போலீசுகள் என எல்லோருமே சாந்தியை தேட ஆரம்பித்தார்கள். கடைசியில் காவிரி ஆற்றங்கரைக்கு சென்று அங்கிருந்த சாந்தியையும் கண்டுபிடித்துவிட்டார்கள்.
டாக்டர்கள் வலுக்கட்டாயம்
அரசு ஆஸ்பத்திரிக்கு வருமாறு எல்லோரும் கூப்பிட்டார்கள்.. சாந்தி வரவில்லை.. அறிவுரை சொன்னார்கள், வற்புறுத்தினார்கள்.. ஆனால் சாந்தியோ ஆஸ்பத்திரி பக்கம் தலைவைச்சு கூட படுக்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்து விட்டார். உடம்பு ரொம்ப வீக்-ஆக இருப்பதாகவும், குழந்தைக்கு பிரச்சனை வந்துவிடும் என்றெல்லாம் எடுத்து சொல்லி ஒருவழியாக எல்லோரும் சேர்ந்து சாந்தியை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள்.
அரசு சமாச்சாரங்கள்
ஆனால் ஆஸ்பத்திரிக்கு கூட்டி செல்வதற்குள் எல்லோருமே படாத பாடு பட்டுவிட்டார்கள். இப்போது சாந்திக்கு ஆஸ்பத்திரியில் ரத்தசோகை இருப்பதால் அதற்கான சிகிச்சை போய்க் கொண்டிருக்கிறது. இந்த "நாம் இருவர் நமக்கு இருவர்", "ஒரு குழந்தை போதும்", "குடும்ப கட்டுப்பாடு" போன்ற அரசு சம்பந்தப்பட்ட எந்த சமாச்சாரமும், தகவலும் இந்த காதல் ஜோடிக்கு இன்னும் தெரியவில்லை போல இருக்கு!!