ஸ்ரீரங்கம் போன சசிகலாவிற்கு மாறாத வரவேற்பு - ஜெ.கொடுத்த பேட்டரி காரில் பயணம்...மனதில் என்னவோ திட்டம்
திருச்சி: ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ள சசிகலாவிற்கு போகும் இடமெங்கும் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. குல தெய்வ கோவில், திருவிடைமருதூரில் சாமி தரிசனம் செய்து விட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசனம் செய்த சசிகலாவிற்கு அமமுகவினர் மட்டுமல்லாது கோவில் அர்ச்சகர்களும் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.
Recommended Video
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ஜெயலலிதாவிற்கு மட்டுமல்ல சசிகலாவிற்கும் விருப்பமான கோவில். ஜெயலலிதா உயிருடன் இருந்தவரைக்கும் அடிக்கடி ஸ்ரீரங்கம் சென்று சாமி தரிசனம் செய்து வருவார். ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உடன் தனி கவனம் பெற்றது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்.
மிகப்பெரிய கோவிலான ஸ்ரீரங்கம் கோவிலில் முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் எளிதாக சாமி தரிசனம் செய்யும் வகையில் தனது சொந்த செலவில் இரண்டு பேட்டரி கார்களை வாங்கிக் கொடுத்தார் ஜெயலலிதா. அதில் பயணமும் செய்துள்ளார்.

ஜோதிடர்கள் ஆலோசனை
ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு சில மாதங்களிலேயே சிறைக்குப் போன சசிகலா நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மாதம் சென்னை திரும்பினார். அரசியலில் ஓய்வு அறித்த அவர், ஜோதிடர்களின் ஆலோசனைப்படி ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளார்.

தோஷம் நீங்க பரிகாரம்
சசிகலா நேற்று குல தெய்வ கோவிலிலும், திருவிடை மருதூர் மகாலிங்க சாமி கோவிலிலும் கண் கலங்க சாமி தரிசனம் செய்துள்ளார். இனி எல்லாம் நல்ல நேரம்தான் என்று சாமியார் குறி சொன்னது சசிகலாவிற்கு சற்றே ஆறுதல் அளித்தாலும் தோஷம் நீங்க மகாலிங்க சாமி கோவிலில் யாகமும் வளர்த்து வழிபட்டுள்ளார்.

ஸ்ரீரங்கத்தில் சசிகலா
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சுக்கிர ஸ்தலமாகும். அங்கு வெள்ளிக்கிழமை ஸ்ரீரங்கநாதரை தரிசனம் செய்வது சிறப்பானது. வெள்ளிக்கிழமையான இன்றைய தினம் சசிகலா ஸ்ரீரங்கத்திற்கு வந்திருந்தார். ரங்கா ரங்கா கோபுர வாசலில் இருந்தே அவருக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது.

பேட்டரி காரில் சசி பயணம்
கோபுர வாசலில் இருந்து பேட்டரி காரில் கருடாழ்வார் மண்டபத்திற்கு பயணித்தார் சசிகலா. அப்போது ஜெயலலிதா உடன் பேட்டரி காரில் பயணித்த பழைய நினைவுகள் வந்து போக அமைதியாகவே பயணித்தார் சசிகலா. கருடாழ்வாரையும், ஸ்ரீரங்கநாதரையும் தரிசனம் செய்த பின்னர் சக்கரத்தாழ்வார் சன்னதிக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார்.

மனதில் என்ன திட்டம்
அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிவித்தாலும் சசிகலாவின் திடீர் ஆன்மீக பயணத்திலும் அரசியல் இல்லாமல் இல்லை. ஜெயலலிதா உடன் போகும் போது சசிகலாவிற்கு கிடைத்த அதே மரியாதையும் வரவேற்பும் இப்போது கிடைக்கிறது. இந்த வரவேற்பினை தனக்கு சாதகமாக மாற்ற நினைக்கிறார் சசிகலா. அந்த திட்டத்துடன்தான் மீண்டும் பயணத்தை தொடங்கியுள்ளார் சசிகலா. ஆன்மீக பயணம் விரைவில் அரசியல் பயணமாக மாறினாலும் ஆச்சரியமில்லை.












Click it and Unblock the Notifications