டிராஃபிக் ராமசாமி இன்னும் மறையலப்பா.. பெண் வக்கீல் வடிவத்தில் மறுபிறவி! திருச்சியை திணறடித்த சம்பவம்
திருச்சி: திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் செய்த குளறுபடியை கண்டித்து மூத்த பெண் வழக்கறிஞர் ஜெயந்தி ராணி தனி மனுஷியாக சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது தில்லை நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சி தில்லை நகர் பகுதியில் வசித்து வரும் மூத்த வழக்கறிஞரான ஜெயந்தி ராணி, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு விவகாரத்தில் தனிக் கவனம் செலுத்தக் கூடியவர். அதேபோல் கணவனால் கைவிடப்பட்டு மாமனார், மாமியாரால் கொடுமைகளுக்கு ஆளாகும் பெண்களுக்கு ஆதரவாக களமாடக்கூடியவர். இதற்காக அவர் பெரிதாக கட்டணங்கள் கூட வசூலிப்பது கிடையாது. முடிந்த வரை இலவச சட்ட ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.

இந்நிலையில் அவரது இல்லம் அமைந்துள்ள திருச்சி தில்லை நகர் சாஸ்திரி சாலை பகுதியில் பாதாள கழிவுநீர் கால்வாய் குழாய்களை தரைக்கு மேல் அமைத்ததை எதிர்த்து மாநகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டிருக்கிறார். ஆனாலும் அதிகாரிகளோ, ஒப்பந்ததாரரோ இது பற்றி பெரிதாக பொருட்படுத்தாமல் மெத்தனமாக செயல்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து பொறுத்தது போதும் என இன்று பொங்கி எழுந்த வழக்கறிஞர் ஜெயந்தி ராணி சாலையில் நாற்காலியை போட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
இதையடுத்து இதென்னடா வம்பா போச்சு என பதறியடித்த மாநகராட்சி நிர்வாகத் தரப்பில், தர்ணாவில் ஈடுபட்ட வழக்கறிஞர் ஜெயந்தி ராணியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது. சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக சாலையில் அமர்ந்து மூத்த வழக்கறிஞர் ஒருவர் தர்ணாவில் ஈடுபட்டது திருச்சி வழக்கறிஞர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதனிடையே திருச்சி தில்லை நகர் என்றில்லை, மாநகராட்சி அலுவலகத்தின் எதிரே உள்ள சாலையும் மோசமாக தான் உள்ளது.
அதேபோல் ஏற்கனவே ஒன் இந்தியா தமிழில் குறிப்பிட்டிருந்ததை போல் திருச்சி கருமண்டபம் பகுதியில் நடைபெறும் ஆமை வேக சாலைப் பணிகளால் திருச்சிக்குள் செல்வதற்கும், வெளியேறுவதற்கும் தேவையின்றி அரை மணி நேரம் முதல் 45 நிமிடங்கள் வரை வீணாகிறது. ஆகையால் இனி வரும் காலங்களிலாவது மாநகராட்சி அதிகாரிகளும், உரிய பொறுப்பு பொறியாளர்களும் மிகுந்த கவனத்துடன் பணிகளை கையாள வேண்டும் என்பது திருச்சி மாநகர மக்களின் கோரிக்கையாக உள்ளது.












Click it and Unblock the Notifications