ஒரே டிக்கெட் போதும்.. திருச்சியில் இருந்து இலங்கை வழியாக சிங்கப்பூருக்கு பறக்கலாம்! நோட் பண்ணுங்க
திருச்சி: திருச்சியில் இருந்து இலங்கை வழியாக சிங்கப்பூருக்கு ஒரே பயணச்சீட்டின் மூலம் செல்லும் புதிய நடைமுறையை ஸ்ரீலங்க்கன் விமான நிறுவனம் தொடங்கி உள்ளது. இந்த விமான சேவை வாரத்தில் 4 நாட்கள் நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து நம் நாட்டின் பல நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் திருச்சி -இலங்கை இடையே ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் சார்பில் தினசரி விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் கூடுதலாக ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் புதிய சேவையை தொடங்கி உள்ளது. அதாவது திருச்சியில் இருந்து இலங்கை வழியாக நேரடியாக சிங்கப்பூருக்கு ஒரே பயணச்சீட்டில் பயணிப்பதற்கான சேவையை தொடங்கி உள்ளது.
இதற்காக திருச்சி -சிங்கப்பூா் என ஒரே பயணச்சீட்டின் மூலம் இலங்கை சென்று அங்கிருந்து அதே விமானம் அல்லது அதே நிறுவனத்தைச் சோ்ந்த மாற்று விமானம் மூலம் பயணிகளால் பயணிக்க முடியும். இதில் இலங்கையில் உடைமைகளை இறக்கி மீண்டும் சோதிப்பது, குடியேற்றச் சோதனை உள்ளிட்டவை தேவையில்லை. ஒருமுறை திருச்சியில் அதை மேற்கொண்டாலே போதும். இதனால் பயணிகளின் நேரம் மிச்சப்பட உள்ளது.
இதுபோல ஏற்கெனவே வளைகுடா நாடுகளுக்கு திருச்சியிலிருந்து ஒரே விமானச் சீட்டு மூலம் இலங்கை சென்று அங்கிருந்து அதே நிறுவனத்தின் வேறு (மாற்று ) விமானம் மூலம் பயணிக்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. அதுபோல சிங்கப்பூருக்கும் செல்ல இந்தப் புதிய வசதி திருச்சியில் அமலாகியுள்ளது. இந்த புதிய விமான சேவை நேற்று முன்தினம் முதல் செயல்பாட்டுக்கு வந்தது.
வாரந்தோறும் செவ்வாய், புதன், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த விமானம் இயங்க உள்ளது. இந்த கிழமைகளில் திருச்சியிலிருந்து காலை 9.55க்கு புறப்படும் விமானம் காலை 10.55 மணிக்கு இலங்கை தலைநகா் கொழும்பு விமான நிலையத்தை அடைகிறது. பின்னா் அங்கிருந்து மதியம் 12.15க்கு புறப்பட்டு மாலை 6.55 மணிக்கு சிங்கப்பூரை சென்றடைய உள்ளது. மறுமார்க்கமாக அங்கிருந்து மறுநாள் அதிகாலை இலங்கைக்கு வந்து அங்கிருந்து மறுநாள் காலை 7.05க்கு புறப்பட்டு திருச்சியை காலை 8.05க்கு வந்தடைகிறது.
பொதுவாகவே இலங்கை விமானங்களில் சுமாா் 30 கிலோ வரை உடைமைகளை எடுத்துச்செல்ல அனுமதி உள்ளது. இதனால் பயணிகள் எப்போதுமே அந்த விமானங்களை விரும்புவா். அந்த வகையில் திருச்சியிலிருந்து சிங்கப்பூா் செல்லும் இந்த விமானத்திலும் அதிக உடைமைகளை கொண்டு செல்ல அனுமதிக்கும் பட்சத்தில் விமான இருக்கைகள் நிரம்பும் என எதிா்பாா்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications